திருச்சி: பெண்களுக்கென்று தபால் நிலையம் பெண்களுக்கென்று தனி காவல் நிலையம் அமைத்ததை தொடர்ந்து, மத்திய அரசு பெண்களுக்கென்று தனி வங்கியையும் அமைத்தது. இதன் பெயர் பாரதிய மகிளா வங்கி.
செவ்வாய்க்கிழமை இவ்வங்கியின் 56வது கிளை திருச்சியில் துவங்கப்பட்ட நிலையில் 2014-15-ம் நிதியாண்டில் ஆண்டில் பாரதிய மகிளா வங்கி ரூ.1100 கோடி அளவில் வர்த்தகம் செய்துள்ளது.
2015-16ஆம் ஆண்டில் வங்கியின் வர்த்தக இலக்கை, கூடிய விரைவில் வங்கியின் நிர்வாக குழு முடிவு செய்யும் என இவ்வங்கியின் தலைவர் மற்றும் செயல் இயக்குநரான உஷா அனந்தசுப்பிரமணியன் தெரிவித்தார்.
பெண்கள் பொருளாதாரத்தில் வலுவடைய வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசால் கடந்த 2013 ஆண்டு நவம்பர் 19-ம் தேதி பாரதிய மகிளா வங்கி தொடங்கப்பட்டது.
இந்தியாவில் பெண்கள் சுயதொழில் துவங்க ஆதரிக்கும் வகையில் பாரதிய மகிளா வங்கி பல திட்டங்களை வகுத்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியாவில் பல இடங்களில் இவ்வங்கியின் மூலம் பெண்கள் கடன் உதவி பெற்றுள்ளனர்.