பெங்களுரூ: இந்தியாவின் பயணிகள் விமான போக்குவரத்து சந்தையை பிடிக்க பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து போட்டி போட்டு வரும் நிலையில், பெங்களுரை சேர்ந்த ஏர் பிகாசஸ் நிறுவனம் அடுத்த இரு வாரத்தில் உள்நாட்டு விமான பயணிகள் போக்குவரத்து சேவையை அளிக்க திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையை பிடிக்க ஏர் ஏசியா மற்றும் விஸ்தாரா நிறுவனங்கள் குதித்த சில மாதங்களில், ஏர் பிகாசஸ் துவங்க உள்ளது. இதன் மூலம் சந்தையில் விமான நிறுவனங்கள் மத்தியில் தாறுமாறான போட்டி நிலவும்.
ஏர் பிகாசஸ்
பெங்களுரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிகார் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உருவான ஏர் பிகாசஸ் நிறுவனம், பயணிகள் விமான சேவை துவங்குவதற்கான அனைத்து ஒப்புதல்களையும் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் பெற்றுள்ளது.
முதல் கட்ட சேவை
இந்நிறுவனம், முதல் கட்டமாக ஏப்ரல் 12ஆம் தேதி பெங்களுரில் இருந்து திருவனந்தபுரம் மற்றும் ஹூப்ளி பகுதிகளுக்கு விமான சேவை அளிக்க உள்ளது.
விமானங்கள்
ஏர் பிகாசஸ் நிறுவனம், கடன் மற்றும் நிறுவன முதலீடு வாயிலாக 100 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்துள்ளதால் ஏர்பஸ், போயிங் போன்ற பெரிய விமானங்களை வாங்க திட்டமிடவில்லை. இதனால் 66 இருக்கைகள் கொண்ட இரு ஏடிஆர் விமானங்களை கொண்டு தனது சேவையை துவங்க உள்ளது.
இம்மாத இறுதியில் மேலும் ஒரு ஏடிஆர் விமானத்தை நிறுவனத்தில் இணைக்க உள்ளது.
டிக்கெட் முன்பதிவு
இந்நிறுவனத்தின் டிக்கெட் முன்பதிவை ஏப்ரல் 4ஆம் தேதி துவங்க உள்ளதாக ஏர் பிகாசஸ் தெரிவித்துள்ளது.
எதிர்கால திட்டம்
இந்நிறுவனத்தில் சிறு விமானங்களின் எண்ணிக்கையை உயர்த்தி அடுத்த சில மாதங்களில் கொச்சி, சென்னை, தூத்துக்குடி, பெலாகவி, ராஜமுந்திரி, புதுச்சேரி, மதுரை போன்ற பகுதிகளுக்கும் விமான சேவை அளிக்க திட்டமிட்டுள்ளது.
10 நிறுவனங்கள்
இந்தியாவில் பயணிகள் விமான போக்குவரத்து சந்தையில் ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், ஜெட் லைட் (முன்பு ஏர் சஹாரா), ஸ்பைஸ்ஜெட், கோ ஏர், இண்டிகோ, ஏர் கோஸ்டா, ஏர் ஏசியா, விஸ்தாரா நிறுவனங்களை தொடர்ந்து பத்தாவது நிறுவனமாக ஏர் பிகாசஸ் சந்தையில் நுழைந்துள்ளது.
நஷ்டம்
நாட்டில் செயல்படும் விமான நிறுவனங்கள் ஏற்கனவே கடுமையான நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், நீண்ட கால திட்டத்துடன் தொடர்ந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் குதித்த வண்ணம் உள்ளது.