மும்பை: விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட் முதல் அணுசக்தி வரை பல துறைகளில் வெளிநாட்டுகளில் உதவி இல்லாமல் சரித்திரம் படைத்து வரும் இந்தியாவால், ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க வெளிநாடுகளில் இருந்து பேப்பர் மற்றும் மைகளை இறக்குமதி செய்கிறோம். இந்நிலை கூடிய விரைவில் மாற வேண்டும் எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ரூபாய் நோட்டு அச்சடிப்பிலும் மேக் இன் இந்தியா திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என மோடி வலியுறுத்தினார்.
80வது ஆண்டு விழா
இந்திய பொருளாதாரத்தில் ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டு 80 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், ஆர்பிஐ சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அருண் ஜேட்லி, ரகுராம் ராஜன் மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மோடி
இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய மகாத்மா காந்தியின் முகத்தை, இறக்குமதி செய்யப்பட்ட பேப்பரில் அச்சடிப்பதா? இந்தியாவில் ரூபாய் நோட்டுகளுக்கான தரம் வாய்ந்த காகிதத் தாளை தயாரிக்க நிறுவனங்கள் இல்லையா? எனப் பல கேள்விகள் எழுப்பினார்.
ரிசர்வ் வங்கி
கூடிய விரைவில் ரிசர்வ் வங்கி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட காகிதம் மற்றும் மையினால் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க வேண்டும் என்றார் மோடி.
இதற்கான பணிகளை ஏற்கனவே துவங்கியுள்ளதாக ரிசர்வ் வங்கித் தரப்பில் பிரதமருக்குப் பதில் அளிக்கப்பட்டது.
விற்பனை
மேலும் இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கப் பயன்படும் காகிதத்தை எதிரி நாடுகள், பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்த பெறுவதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் மோடி கூறினார்.
பணத்தை அச்சிடவும் செலவுதான்
2013-14 நிதியாண்டில் ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்காக 3,210 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. 2012-13ஆம் நிதியாண்டின் இதன் அளவு 2,870 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.