மும்பை: இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஆடை விற்பனை நிறுவனமான மைந்த்ரா நிறுவனம் தங்களது இணையதள சேவையை முற்றிலும் மூடிவிட திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மொபைல் சேவையின் பக்கம் திரும்பியதால் இணையதள சேவையின் பயன்பாடு அதிகளவில் குறைந்துள்ளது. இந்நிலையில் மைந்த்ரா நிறுவனத்தின் கவனம் முழுவதும் தற்போது மொபைல் சேவையை மேம்படுத்துவதிலும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்துவதிலும் உள்ளது.
ஸ்மார்ட்போன்
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மொபைல் சேவை மட்டும் அளிக்கும் ஒரு ஈகாமர்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி இரு மடங்கு உயரும் என சந்தை கணிப்புகள் தெரிவிக்கிறது.
இணையதள சேவை மூடல்..
சில மாதங்களுக்கு முன்னரே மைந்த்ரா நிறுவனம் தங்களது இணையதள சேவையை மூட உள்ளதாக செய்திகள் வெளியானது, தற்போது இந்நிறுவன வளர்ச்சி திட்டங்களில் பணியாற்றி வரும் உயர் அதிகாரி ஒருவர் இந்நிறுவனத்தின் இணையதள சேவை வருகிற மே 1ஆம் தேதி மூட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள்
தற்போதைய நிலவப்படி மைந்த்ரா நிறுவனத்தின் 80% வாடிக்கையாளர் மற்றும் 70% விற்பனை மொபைல் அப்ளிகேஷன்களில் இருந்து நடக்கிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் விற்பனை அளவு 60% ஆக உள்ளது.
பிளிப்கார்ட்
ஆடை விற்பனை நிறுவனமான மைந்த்ரா நிறுவனத்தை ஆன்லைன் மொத்த சில்லறை விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் சில மாதங்களுக்கும் முன் கைபற்றியது.
அதன் பின் மைந்த்ரா நிறுவனத்தின் திட்ட நடவடிக்கை முற்றிலும் மாறியுள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் பெரும்பாலான முதலீடுகள் அனைத்தும் மொபைல் அப்ளிகேஷன்களை மேம்படுத்தவே செலவிடப்பட்டு வருகிறது.