மும்பை: நாட்டின் முன்னணி வீட்டுக் கடன் நிறுவனமான எச்டிஎப்சி, பெண்களுக்கான கடன் வட்டி விகிதத்தில் 0.05 சதவீதத்தைக் குறைத்து 8.85% ஆக அறிவித்துள்ளது.
இதன் மூலம் நாட்டின் மூன்று முக்கிய வங்கிகளான எஸ்பிஐ, ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி ஆகியவை ஒரே அளவிலான வட்டி வகிதத்தில் கடன் அளிக்கும் நிலை உருவாகியுள்ளது.
வியாழக்கிழமை இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களுக்காகச் சிறப்பு வட்டி விகிதத்தில் உமென் பவர் என்ற பெயரில் பிரத்தியேக கடன் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் எச்டிஎப்சி நிறுவனம் அதிகப்படியான பெண் வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளது.
இந்த வட்டி விகிதம் வீட்டுக் கடன் மட்டும் அல்லாமல் வீட்டு மேம்பாட்டுக் கடன், வீட்டு விரிவாக்க கடன், மறுகடனிட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களுக்கும் பொருந்தும்.
மேலும் புதிய கட்டிடத்திற்கு 9.9 சதவீதம் அளவிலான வட்டி வகிதத்தில் வீட்டுக் கடன் அளிப்பதாக எச்டிஎப்சி தெரிவித்துள்ளது.