டெல்லி: நாட்டில் மறைமுக வரி விதிப்பைச் சீர்ப்படுத்த மோடி தலைமையிலான அரசு, சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவைச் செயல்படுத்த முயற்சி செய்து வருகிறது.
இத்திட்டத்திற்கு இந்தியாவில் 15க்கும் அதிமான மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது, இதில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றம்
பல மாதங்களாகக் கிடப்பில் கிடத்த சரக்கு மற்றும் சேவை வரி (GST) மசோதாவை, நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.
அருண் ஜேட்லி
இந்த மசோதாவைக்குக் குறித்து அருண் ஜேட்லி கூறுகையில் ''சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மத்திய, மாநிலஅரசுகளுக்கு ஆதாயத்தை மட்டுமே தரும் ஒரு நடவடிக்கை. இந்த மசோதாவால் வரி வசூல் மற்றும் வர்த்தக நிலை பாதிப்புபோன்ற எந்த விதமான பாதகமான நிலையும் உருவாகாது'' என, தெரிவித்தார்.
சரி, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா என்றால் என்ன?
உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தையில் விற்கும்போது அதன் மீது கலால் வரி, சேவை வரியும், அந்தப் பொருட்களை வர்த்தகத்திற்காக மற்றொரு மாநிலத்திற்குக் கொண்டு செல்லும் போது நுழைவு வரி, மதிப்பு கூட்டு வரி எனப்பல வரி விதிக்கப்படுகிறது.
இவை அனைத்தும் ஒரு மாநிலத்தில் இருந்து, மற்றொரு மாநிலத்திற்கு அதிகளவிலான வித்தியாசத்தில் மாறுபடும்.
இறக்குமதி பொருட்கள்
அதே நேரத்தில் பொருட்களை இறக்குமதி செய்தால், அவற்றின் மீது சுங்க வரி விதிக்கப்படுகிறது.
சீர்ப்படுத்துதல்..
இதுபோல் ஒவ்வொரு மாநிலமும் உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது வரி மேல் வரி விதித்து வரிக் கட்டமைப்பை சீர்குலைப்பதோடு, பொதுமக்களுக்கு வரிச் சுமையையும் அதிகரித்துள்ளது.
இதனால் பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகள் ஏற்படுவதாகவும் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசு
மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் பல விதமான மறைமுக வரிகளை ஒன்றிணைத்து சீர்ப்படுத்தி ஒரே வரியாக செயல்முறைப்படுத்தும் நடவடிக்கையே GST எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி.
விளைவு..
இத்திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் அதிக வரி வருமானம் பெறும் மறைமுக வரிகளான உற்பத்தி வரி, சேவை வரிபோன்றவை புழக்கத்தில் இருந்து நீங்கும்.
அதேபோல் மாநில அரசுகளால் விதிக்கப்படும் மதிப்பு கூட்டு வரியான VAT வரியும் விலக்கிக் கொள்ளப்படும். அதன்பின் மத்திய மற்றும் மாநில அரசுகள் தரப்பில் ஒரு முனை வரி விதிப்பு மட்டுமே அமலில் இருக்கும்.
எதிர்ப்புகள்
இத்தகைய வரி விதிப்பால் மாநில அரசுகளுக்குக் கிடைக்கும் வரி வருமான அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே தமிழ்நாடு போன்ற பல மாநிலங்கள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறது.
நாட்டின் வளர்ச்சி
இந்த மசோதா அமலுக்குக் கொண்டு வருவதன் மூலம் நாட்டின் வளர்ச்சி குறுகிய காலகட்டத்தில் 1-3 சதவீத வளர்ச்சிக்கு உதவும்.
இதன் மூலம் 2015ஆம் வருடத்தின் மூடிவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.5 சதவீதத்தை எட்டிவிட முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.
27 சதவீத வரி
தற்போது நிதியமைச்சகம் ஒருங்கிணைந்த மறைமுக வரியாக அறிவித்துள்ள சரக்கு மற்றும் சேவை வரியான 27 சதவீத வரி, உலகளவில் உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படும் 16.4 சதவீத சராசரி வரியைவிடவும் அதிகம்.
இதனால் நிதியமைச்சகம் வரி குறைப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வோண்டும் எனப் பல தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.