பெங்களூரு: ஸ்மார்ட்போன் சந்தையை நம்பி டெக்ஸ்டாப் தளத்தை மூடிய மிந்திரா நிறுவனத்திற்கு, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 சதவீத வர்த்தகத்தை இழந்துள்ளது.
ஆடை விற்பனையில் தனது சந்தையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்ட பிளிப்கார்ட் நிறுவனம் மிந்திரா நிறுவனத்தைக் கைப்பற்றியது. அதன் பின் மிந்திரா மாற்றங்களைச் செய்து வெற்றி கண்டுவந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி இந்நிறுவனத்தின் டெஸ்க்டாப் இணையதளச் சேவையை மூற்றிலும் மூடிவிட்டு முழு மொபைல் விற்பனை நிறுவனமாக மாறியது.
இதன் எதிரோலியாகக் கடந்த ஒரு வாரித்தில் மட்டும் இந்நிறுவனம் 10 சதவீத வர்த்தகத்தை இழந்துள்ளது, மிந்திரா மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மொபைல் தளம்
இந்தியாவில் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதைக் கணக்கிட்டு மிந்திரா நிறுவனம், முழு மொபைல் சேவை நிறுவனமாக மாறியது.
உஷாரானது அமேசான், ஸ்னாப்டீல்
இதனையடுத்து இச்சந்தையின் போட்டி நிறுவனமாகத் திகழும் அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் ஆகியவை முழு மொபைல் சேவை திட்டத்தை முழுமையாகக் கைவிட்டுள்ளது.
ஸ்னாப்டீல்
இதுகுறித்து ஸ்னாப்டீல் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில், "ஸ்மார்ட்போன் வர்த்தக சந்தையின் அளவு அதிகரித்திருந்தாலும், இன்றளவும் குறிப்பிடத்தக்க அளவிலான வாடிக்கையாளர்கள் டெஸ்க்டாப் தளத்தைப் பயன்படுத்திவருகின்றனர். இதனால் வாடிக்கையாளர்களை ஏமாற்ற எங்களுக்கு விருப்பம் இல்லை." எனத் தெரிவித்தார்.
75 சதவீத வர்த்தகம்
ஸ்னாப்டீல் நிறுவனத்தின் 75 சதவீத ஆர்டர்கள் மொபைல் போன் மூலம் மட்டுமே செய்யப்படுகிறது. இந்நிலையிலும் முழுமொபைல் சேவை நிறுவனமாக மாற ஸ்னாப்டீல் விரும்பவில்லை.
இதேபோன்ற நிலை தான் அமேசான், ஈபே போன்ற நிறுவனங்களிலும் நிலவுகிறது.
மிந்திரா நிறுவனம்
கடந்த மாதம் இந்நிறுவனம் அளித்த தகவலின் படி இந்நிறுவனத்தின் 90 சதவீத வாடிக்கையாளர்கள், 70 சதவீத வர்த்தகம் மொபைல் தளத்தின் மூலம் கிடைப்பதாக மிந்திரா தெரிவித்துள்ளது.
பிளிப்கார்ட்
அதேபோல் பிளிப்கார்ட் நிறுவனமும் அடுத்த ஒரு வருடத்தில் இதேபோன்ற மாற்றத்தை செய்யக் காத்துக்கொண்டு இருப்பதாகவும் கடந்த வாரம் தெரிவித்தது.
இரண்டுமே வேண்டும்...
சந்தையைப் பொருத்த வரை ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் ஆகிய இரண்டையும் அளிப்பதே சிறந்தது.
ஈகாமர்ஸ் சந்தை
2030ஆம் வருடத்தில் இந்திய ஈகாமர்ஸ் சந்தை இந்திய ஜிடிபியில் 2.5 சதவீதமாக இருக்கும் எனக் கோல்டுமேன் சாச்சஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல் இக்காலகட்டத்தில் ஈகாமர்ஸ் துறை 15 மடங்கு உயர்ந்து 300 பில்லியன் சந்தை மதிப்பை அடையும் எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இதன் மதிப்பு 20 பில்லியன் டாலர்.