மும்பை: இந்தியாவில் வங்கி ஊழியர்கள் பல ஆண்டுகளாக ஊதிய உயர்வுக்காகத் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈட்டுப்பட்டு வந்தனர், கடைசியாக மத்திய அரசு வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு அளிக்க ஒப்புதல் அளித்தது.
இதற்கான ஒப்பந்தத்தில் இந்திய வங்கி அமைப்புகள் மற்றும் மத்திய அரசு திங்கட்கிழமை கையெழுத்திட்டது.
15 சதவீத ஊதிய உயர்வு
வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல், பலக்கட்டப் பேச்சுவார்த்தையிலும் தோற்ற நிலையில் மத்திய அரசு 15 சதவீத ஊதிய உயர்விற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் இந்திய வங்கிகளில் ரூ14,500-ரூ52,000 ஆக இருந்த சம்பள நிலைகள் ரூ23,700-ரூ85,000 ஆக உயர்ந்துள்ளது.
30 மாத நிலுவை தொகை
மேலும் இந்தப் புதிய சம்பள உயர்வு நவம்பர் 1,2012ஆம் ஆண்டுச் சம்பளம் முதல் பிரதிபலிக்க உள்ளது. இதனால் வங்கி ஊழியர்கள் 30 மாத்திற்கான நிலுவை தொகையைக் கூடிய விரைவில் பெற உள்ளதாக இந்திய வங்கி அமைப்புகள் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி
UFBU என்ற அமைப்பின் கீழ் உள்ள 9 வங்கி அமைப்புகள் மற்றும் இந்திய வங்கி அமைப்பு (IBA) ஆகியவைகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு தனது ஒப்புதலைக் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இதற்கான ஒப்பந்தம் திங்கட்கிழமை கையெழுத்தானது.
10 இலட்சம் பணியாளர்கள்
இந்த ஊதிய உயர்வின் மூலம் பொதுத்துறை வங்கிகள், பழைய தனியார் வங்கிகள் மற்றும் சில பன்னாட்டு வங்கிகளில் பணியாற்றும் 10 லட்சம் வங்கிப் பணியாளர்கள் பயன் பெற உள்ளனர்.
4,725 கோடி ரூபாய்
மேலும் 15 சதவீத ஊதிய உயர்வால், வங்கித் துறைக்கு வருடத்திற்கு 4,725 கோடி ரூபாய் கூடுதல் செலவு செய்யப்படுகிறது. மேலும் வருடாந்திர சலுகை மற்றும் இதர பலன்களுக்கான செலவுத் தொகை 8,370 கோடி ரூபாய் வரை உயர உள்ளது.
விடுமுறை
மேலும் வங்கி ஊழியர்களின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு மற்றும் மாத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் வீடுமுறை அளிக்கப்படுவதாக இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.