பெங்களூரு: பேடிஎம் நிறுவனத்தில் அலிபாபா முதலீடு செய்ததன் மூலம் இந்திய சந்தையில் சீன தயாரிப்புகளை வெளிப்படையாக விற்கத் துவங்கியுள்ளது. இதனால் இந்திய நிறுவனங்களின் வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈகாமர்ஸ் சந்தையில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதைக் குறித்து மத்திய இத்துறை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இந்திய நிறுவனங்களான பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், ஜபாங் போன்றவை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
சீனப் பொருட்களை இந்தியாவில் விற்றால், இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை எங்கு விற்பது என்பது தான் நம் ஊர் ஈகாமர்ஸ் நிறுவனங்களின் கேள்வி..
பேடிஎம்- அலிபாபா
பிப்ரவரி மாதம் சீன ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா, அன்ட் பைனான்சியல் சர்விசஸ் நிறுவனத்தின் மூலம் பேடிஎம் நிறுவனத்தின் (ஒன்97 கம்யூனிகேஷன்) 40 சதவீத பங்குகளில் முதலீடு செய்தது.
இதன் மூலம் பல முயற்சிகளுக்குப்பின் அலிபாபா இந்திய சந்தையில் தனது விற்பனையைச் சாத்தியப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் நுழையப் பல முறை முயற்சி செய்து தோற்றுப்போனது குறிப்பிடத்தக்கத்து.
முதல்கட்ட விற்பனை
தற்போது அலிபாபா முதல்கட்டமாக பேஷன் பொருட்கள், ஆடைகள், பேக்குள், வீட்டு அலங்கார பொருட்கள், பொம்மைகள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை விற்கத் திட்டமிட்டுள்ளது.
நிதி மற்றும் வங்கி பரிமாற்றச் சேவை
மேலும் பேடிஎம் தளத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் அலி எக்ஸ்பிரஸ் கட்டண செலுத்தும் நுழைவு மூலம் செய்யப்படுவதால், நிதி துறை மற்றும் வங்கி பரிமாற்றச் சேவையிலும் அலிபாபா இறங்கியுள்ளது.
1.5 பில்லியன் டாலர் வர்த்தகம்
பேடிஎம் நிறுவனத்தில் தற்போது ஆண்டுக்கு 1.5 பில்லியன் டாலர் வரையிலான வர்த்தகம் செய்யப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் 30 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
அடுத்த வருடத்தில் அலிபாபா நிறுவனத்துட்டனான கூட்டணியில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் 3 பில்லியன் டாலர் வரை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.