டெல்லி: ஜனவரி - மார்ச் மாத காலகட்டங்களில் நாட்டின் மொத்த உற்பத்தி அதிகரித்ததால் ஜிடிபி 7.5 சதவீதமாக உயர்ந்ததுள்ளது. இதனால் பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக உள்ள சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இக்காலகட்டத்தில் சீனா வெறும் 7 சதவீத ஜிடிபி-யை மட்டுமே பதிவு செய்திருந்தது.
வருடாந்திர வளர்ச்சி
2014-15ஆம் ஆண்டுக் காலத்தில் நாட்டின் மொத்த உற்பத்தி அளவின் வளர்ச்சி 7.3 சதவீதமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதன் அளவு 6.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2011ஆம் ஆண்டுக்குப் பின் வேகமாக வளர்ந்த வருடமாக 2014-15ஆம் ஆண்டு உள்ளது.
கணிப்புகளுக்கு 0.1% மட்டுமே குறைவு
கடந்த பிப்ரவரி மாதம் மத்திய புள்ளிவிபர அலுவலகம் நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் எனக் கணித்திருந்தது. ஆனால் கணிப்புகளுக்கு 0.1% மட்டும் குறைவான அளவை இந்திய சந்தை பதிவு செய்துள்ளது.
உற்பத்தி வளர்ச்சி
நாட்டின் உற்பத்தி வளர்ச்சி அதிகரித்துள்ள இவ்வேளையில் இதற்கு இணையாக வேலைவாய்ப்பும் உயர்ந்துள்ளதாக நிதித்துறை செயலாளராக ராஜீவ் மெக்ரிஷி தெரிவித்துள்ளார்.
ஐஐபி
பொருளாதார வல்லுனர்கள் கூறுகையில், ஜிடிபி அளவு உயர்ந்தாலும் இக்காலகட்டத்தில் தொழிற்துறை உற்பத்தி மிகக் குறைந்துள்ளது. இது வளரும் பொருளாதார நாடுகளுக்குச் சிறந்தது இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.