மும்பை: நாட்டின் முன்னணி தனியார் வங்கியான எச்டிஎப்சி, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு மீறி முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு அதிகளவிலான கடனை அளித்துள்ளதாக இவ்வங்கியின் மீது புகார் எழுந்துள்ளது.
வணிக வங்கிகள் தனிநபர் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய கடன் அளவின் உச்ச வரம்பை மீறி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எச்டிஎப்சி வங்கி கடன் அளித்துள்ளது.
எச்டிஎப்சி வங்கி
இதுக்குறித்து எச்டிஎப்சி வங்கி நிர்வாகம் கூறுகையில் கடன் கொடுப்பதற்கு இயக்குநர் குழு ஒப்புதல் அளித்ததாக தெரிவித்துள்ளது.
தற்போது அளிக்கப்பட்டுள்ள 20 சதவீத கடன் கேப்பிடல் பண்டுகளுக்கு உட்பட்டு உள்ளது எனவும் வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஆர்பிஐ விதிமுறைகள்
ரிசர்வ் வங்கி விதிமுறைகளின் படி ஒரு வணிக வங்கி, தனிநபர் நிறுவனங்களுக்கு கேப்பிடல் பண்டுகளில் 15 சதவீதமும், குழும நிறுவனங்களுக்கு 20 சதவீத மட்டுமே கடன் அளிக்க வேண்டும்.
இந்த விதிமுறையை கணக்கில் கொள்ளாமல் எச்டிஎப்சி வங்கி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு கடன் அளித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கூடுதல் கடன் தொகை..
அதே சமயத்தில் தேவைப்பட்டால் கேப்பிடல் பண்டில் 5 சதவீதம் அளவுக்கு கூடுதலாக கடன் கொடுக்க முடியும். ஆனால் இதற்கு வங்கியின் இயக்குநர் குழு ஒப்புதல் தேவை என்று ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளில் உள்ளது.
செய்தி தொடர்பாளர்
ஹெச்டிஎப்சி வங்கி இயக்குநர் குழு ஒப்புதல்களுடனே 20 சதவீத கடன் அளித்துள்ளோம், இவை அனைத்தும் ரிசர்வ் வங்கியின் விதிமுறையின் படியே செயல்படுகிறது என்று இவ்வங்கியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
பொதுக்குழு கூட்டம்
வரும் ஜூலை 21-ம் தேதி எச்டிஎப்சியின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடக்க இருக்கிறது. அப்போது பங்குதாரர்களுக்கு இந்த தகவல் அனுப்பப்படும் என்று இவ்வங்கி தெரிவித்திருக்கிறது.
பிற வங்கிகள்
இதற்கிடையே தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி மற்றும் பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கிகளும் கூட கடந்த காலங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக கடன் வழங்கியுள்ளது.