டெல்லி: மத்திய அரசின் புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதித் தேவையைப் பூர்த்திச் செய்ய, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு இருப்பைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது. முக்கியக் காரணங்களுக்காக, பல மாதங்களாகக் கிடப்பில் இருந்த இத்திட்டம் தற்போது உயிரெழுந்துள்ளது.
இதன்படி மத்திய அரசு முதற்கட்டமாக 5 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை 'ஆஃபர் பார் சேல்' முறையில் விற்க உள்ளதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
5 பொதுத்துறை நிறுவனங்கள்
மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி., ஆயில் இந்தியா மற்றும் மூன்று பொதுத்துறை நிறுவனங்களின் கணிசமான பங்குகளை விற்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.
இதற்கான சட்ட ஆலோசகர்களைப் பங்குவிலக்கல் துறை (Disinvestment Board) நியமித்திருக்கிறது. நிறுவனங்களின் தற்போதைய சந்தை மதிப்பில் சுமார் ரூ.11,500 கோடி வரை திரட்ட முடியும்.
பங்கு அளவுகள்
ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் 15 சதவீதம், ஆயில் இந்தியா நிறுவனத்தில் 10 சதவீதம், என்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்தில் 10 சதவீதம், என்டிபிசி மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (பிஇஎல்) ஆகிய நிறுவனங்களில் 5 சதவீத பங்குகளை விலக்கிக்கொள்ள மத்திய அரசு திட முடிவெடுத்திருக்கிறது.
நிதி திரட்டல்
மத்திய அரசு அளித்த தகவலின் படி என்டிபிசி மூலம் ரூ.5,724 கோடி, ஆயில் இந்தியா ரூ.2,723 கோடி, பிஇஎல் ரூ.1,366 கோடி, ஹிஸ்துஸ்தான் காப்பர் மூலம் ரூ.874 கோடி, என்ஜினீயர்ஸ் இந்தியா மூலம் ரூ. 813 கோடியும் திரட்டப்பட வாய்ப்பு இருக்கிறது.
22,000 கோடி ரூபாய்
10 நிறுவனங்களின் பங்குகளின் விற்பனை முடிவில் மத்திய அரசு 22,000 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.