பெங்களூரு: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் 2015ஆம் நிதியாண்டுக்கான முதல் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டது.
2015ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் 5 சதவீத வளர்ச்சியுடன் 3,030 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.
மொத்த வருவாய்
இந்நிறுவனம் இன்று காலை வெளியிட்டுள்ள காலாண்டு முடிவுகளில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவு 12.4 சதவீதம் உயர்ந்து 14,354 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
15 காலண்டுகள்
கடந்த 15 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு இன்போசிஸ் நிறுவனத்தின் டாலர் வருவாய் இக்காலாண்டில் சுமார் 7 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
டாலர் வருவாய்
இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் டாலர் வருவாய் 5.7 சதவீதம் உயர்ந்து 2.25 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஆனால் லாப அளவில் 1.3 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விஷால் சிக்கா
காலாண்டு முடிவுகளை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய இன்போசிஸ் நிறுவன சீஇஓ விஷால் சிக்கா, "இன்போசிஸ் நிறுவனம் ஆரம்பக்கட்ட வளர்ச்சியில் மட்டுமே உள்ளது. புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய திட்டங்களின் மூலம் இன்போசிஸ் மிகப்பெரிய உச்சத்தை அடைய உள்ளது" எனத் தெரிவித்தார்.
புதிய வாடிக்கையாளர்
2015ஆம் நிதியாண்டில் இந்நிறுவனம் 79 புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று சுமார் 688 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
பணியாளர்கள் வெளியேற்பு
தற்போதைய நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாளர் வெளியேற்பு அளவு 14.2 சதவீதமாக உள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 23.4 சதவீதமாக இருந்தது. குறிப்பிடத்தக்கது.
பணியாளர்கள் எண்ணிக்கை
இக்காலகட்டத்தில் நிறுவனத்தில் புதிதாக 3,336 பணியாளர்கள் இணைந்துள்ளனர். இதன் மூலம் நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 1,79,523 ஆக உயர்ந்துள்ளது.
பங்குச்சந்தை
சந்தை கணிப்புகளை விடவும் அதிகளவிலான லாபம் மற்றும் வருவாய் பெற்றுள்ளதால், இன்போசிஸ் நிறுவன பங்குகள் இன்று மும்பை பங்குச்சந்தையில் 10 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.