மும்பை: வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றம் ஏதும் இல்லாமல் தனது இருமாத நாணய மறுஆய்வு கொள்கையை இன்று அறிவித்துள்ளது.
இதனால் நிதியமைச்சகம் உட்பட வணிக வங்கிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளது.
முக்கியக் காரணங்கள்
இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை, பருவ மழை, மொத்த விலை பணவீக்கத்தில் நிலைப்பாடு மற்றும் சில்லறை விலை பணவீக்கத்தில் சில புள்ளிகள் சரிவு ஆகிய காரணங்களால் இன்று ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தைக் குறைக்கும் எனச் சந்தையில் கருத்துக்கள் நிலவியது.
ஆனால் ரிசர்வ் வங்கியின் இன்றைய அறிவிப்பு சந்தை கணிப்புகளைத் தவிடு பொடியாக்கி உள்ளது.
ரெப்போ விகிதம்
செவ்வாய்க்கிழமை ரிசர்வ் வங்கி வெளியிட்ட இருமாக நாணய கொள்கையில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லாமல் 7.25 சதவீதமாகவும், நுகர்வோர் பணவீக்க இலக்கை 0.2% குறைத்துள்ளது.
பிற வட்டி விகிதம்
மேலும் வங்கிகளின் கேஷ் ரிசர்வ் ரேஷியோ எனப்படும் சிஆர்ஆர் விகிதத்தையும் மாற்றம் ஏதுமில்லாமல் 4 சதவீதமாக அறிவித்துள்ளது. அதேபோல் ரிவர்ஸ் ரெப்போ ரேட் விகிதத்தை 6.25 சதவீதமாக அறிவித்துள்ளது.
வளர்ச்சி
ரிசர்வ் வங்கியின் கணிப்பின் படி 2016ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த வளர்ச்சி 7.6 சதவீதமாக அறிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு இதன் அளவு 9 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்வும் என அறிவித்துள்ளது.