டெல்லி: மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், கடந்த ஜூன் மாதம் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்தியா முழுவதும் இலவச ரோமிங் சேவையை அளித்தது. இதன் பின் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் சுமார் 8 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பிஎஸ்என்எல் பெற்றுள்ளது.
வாடிக்கையாளர் மற்றும் வருவாய் இல்லாமல் தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வந்த பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இது மிகவும் சிறப்பான செய்து.
பிஎஸ்என்எல்
இதுகுறித்துப் பிஎஸ்என்எல் அமைப்பு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கூறுகையில், "கடந்த சில மாதங்களாக அறிவிக்கப்பட்ட திட்டம் மற்றும் சலுகையின் மூலம் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஃப்ரீ ரோமிங் சேவை அறிமுகத்திற்குப் பின் மக்கள் மத்தியில் இச்சேவைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது" எனப் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனுபம் ஸ்ரீவட்சவ் தெரிவித்தார்.
16 லட்சம் வாடிக்கையாளர்
மேலும் அவர் மே மாத முடிவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 8 லட்சமாக இருந்த நிலையில், இலவச ரோமிங் சேவை அறிமுகத்திற்குப் பின் ஜூன் மாத முடிவில் வாடிக்கையாளர் எண்ணிக்கை 16 லட்சமாக உயர்ந்துள்ளது.
தனியார் நிறுவனங்கள்
இந்நிலையில் தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாத நிலையில் இருந்த பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குத் தற்போது புதிய உற்சாகம் கிடைத்துள்ளது.
இந்த 16 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டு தனது வாடிக்கையாளர் சேவையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது பிஎஸ்என்எல்.
6 மாதம்
ஒரு மாதம் மட்டும் வாடிக்கையாளர்களைப் பெற்றால் வெற்றி பெற முடியாது என எங்களுக்குத் தெரியும். அடுத்த 6 மாதங்களுக்கு நிலையான அளவில் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் உயர்வு இருந்தால், மொபைல் வர்த்தகத்தில் கணிசமான வருவாயைப் பெற முடியும் என அனுபம் ஸ்ரீவட்சவ் தெரிவித்தார்.
ஷாக்...
மேலும் ஜூலை மாதத்தில் 1.52 லட்சம் வாடிக்கையாளர் வேறு நிறுவனத்தில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மொபைல் போர்ட்டபிலிட்டி சேவை மூலம் இணைந்துள்ளனர். அதேபோல் 1.20 லட்சம் வாடிக்கையாளர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
ஆக மொத்தம் 30,000 வாடிக்கையாளர்கள் மொபைல் போர்ட்டபிலிட்டி மூலம் கிடைத்துள்ளனர்.