டெல்லி: தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்முறை கல்விக்காகப் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்றுள்ள மாணவர்கள் வட்டி செலுத்துவதிலிருந்து விலக்குப் பெறுவதற்கான சலுகைக் காலத்தை மத்திய அரசு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
மத்திய மனித வளத்துறை அமைச்சகம் இதுகுறித்துக் கடந்த 20-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தொழில்முறை படிப்புக்காகக் கல்விக் கடன் பெற்றுள்ள மாணவர்கள் 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை வட்டி சலுகை பெற வங்கிகளிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) மூலம் கல்விக் கடன் பெற்றுள்ளவர்களுக்கு மட்டும் இந்தக் கல்விக் கடன் வட்டி சலுகை அளிக்கப்படுகிறது. மாணவர்கள் படிப்பு முடித்து வேலைக்குச் சேர்ந்ததும் வட்டி மற்றும் அசலை திரும்பச் செலுத்த வேண்டும் என்பது கட்டாயம்.
இதன்படி சலுகை பெற விண்ணப்பிக்காத பெற்றோர்கள் தாங்கள் கடன் பெற்றுள்ள வங்கிகளில் வட்டிச் சலுகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதன்படி இவ்விதம் வட்டிச் சலுகை அளிக்க வேண்டிய தொகை பற்றிய விவரத்தை வங்கிகள் தங்களது இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய மனித வள அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
வங்கிகளின் இணையதளம் செப்டம்பர் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரை செயல்படும். அதற்குள் மாணவர்களின் பெற்றோர்களும் கடன் வாங்கிய வங்கிகளும் இத்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர் கல்வி படிப்பைத் தொடர்வதற்கு வங்கிகளிடம் பெற்ற கடனை, படிக்கும் காலத்திலும், பிறகு வேலையில் சேரும் காலம் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் ஓராண்டு வரை கடனை திருப்பிச் செலுத்துவதற்குக் கால அவகாசம் வங்கிகள் அளிக்கிறது.
பிளஸ் 2 படித்துத் தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்முறை படிப்பு (இன்ஜினீயரிங் மற்றும் மருத்துவம்) படிக்கும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில் பெற்றுள்ள கடனுக்கான வட்டித் தொகையை அரசு அளித்துவிடும். இந்தச் சலுகை 2009-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.