டெல்லி: உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் பணம் சேமிக்க விரும்பினால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது அவர்களுக்குப் பணத்தை எவ்வாறு கையாளுவது என்பதைச் சிறு வயதிலேயே அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதுதான்.
வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கை அவர்களுக்கெனத் துவக்கித் தருவதும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் மூலம் அவர்கள் தங்கள் கணக்கை கவனித்துக் கொண்டும், எந்த வித ஆபத்தும் இன்றித் தங்கள் சேமிப்பு எவ்வாறு வளர்கிறது என்பதை அறிந்துகொள்ளவும் முடியும்.
குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்கு என்பது அவர்களின் பெரிய உண்டியலைப் போன்றது. அதில் அவர்கள் பணம் பாதுகாப்புடன் இருப்பதோடு வட்டியையும் பெற்றுத்தரும்.
ஒரு குறிப்பிட்ட அளவை இந்தச் சேமிப்பு எட்டியவுடன், அதனைப் பிற முதலீடுகளில் பயன்படுத்தலாம். தற்போது குழந்தைகளுக்கான சிறப்பு அம்சங்களுடன் கூடிய சேமிப்புக் கணக்குகளைப் பல்வேறு வங்கிகள் வழங்குகின்றன. அவற்றை இப்போது நாம் பார்ப்போம்.
எஸ்பிஐ – பெஹ்லாகதம் மற்றும் பெஹ்லிஉதான் (முதல் படி மற்றும் முதல் உயர்வு)
எஸ்பிஐ வங்கி மேற்கூறிய இரு குழந்தைகளுக்கான வங்கிக்கணக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்விரு திட்டங்களும் தினசரி கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகிறது, மேலும் இத்திட்டத்தின் பிற முக்கியச் சிறப்புகளை இப்போது பார்ப்போம்.
1. கணக்கில் உள்ள பணத்திற்குத் தினசரி 4% அளவில் வட்டி கணக்கிடப்படுகிறது.
2. எந்த ஒரு ஸ்டேட் வங்கிக் கிளைக்கும் கணக்கை எளிமையாக மாற்றிவிடலாம்.
3. நாமினி சேவைக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
4. குழந்தைகளுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வங்கி பாஸ்புக் ஸ்டேட் வங்கி அளிக்கிறது.
5. உள்வங்கி பணப் பரிமாற்றத்திற்கு எந்தவகையான கட்டணத்தையும் வங்கி நிர்வாகம் விதிப்பதில்லை.
ஹெச்டிஎஃப்சி வங்கி – குழந்தைகள் சேமிப்புக் கணக்கு
இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள எந்த ஒரு தனி நபரும் குழந்தைகள் சேமிப்புக் கணக்கைத் துவங்கலாம். கிட்ஸ் அட்வான்டேஜ் எனப்படும் இதைத் துவக்க குழந்தையின் வயது 18-க்குள் இருக்கவேண்டும் என்பதுடன் உங்களுக்கு இந்த வங்கியில் கணக்கு இருப்பதும் அவசியம்.
குறைந்த பட்ச மதிப்பு 1000 ரூபாய் எனவும் இது குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கு எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கணக்கில் எப்போதும் குறைந்த பட்ச இருப்பாக 5000 ரூபாய் இருக்க வேண்டியது அவசியம்.
கோடாக் வங்கி – மை ஜூனியர் அக்கவுன்ட்
வருடத்திற்கு அதிகமாக 6 சதவிகிதம் வரை வட்டி வழங்கும் ஒரே வங்கிக் கணக்கு கோடாக் வங்கி மை ஜூனியர் கணக்கு மட்டுமே. இதில் பத்து வருடத்திற்கான தொடர் வைப்பிற்கும் சிப் எனப்படும் சிஸ்டமாடிக் இன்வெஸ்மென்ட் ப்ளான் போன்ற முதலீட்டு வசதிகளும் குழந்தைகளுக்கான நீண்ட காலச் சேமிப்புகளுக்கு வழிவகைச் செய்யும் வகையில் வசதி உள்ளது.
இது குழந்தைகளுக்கான ஒரு அடையாள அட்டையும் வழங்குவதுடன் பல கவர்ச்சிகரமான வவுச்சர்கள், சினிமா டிக்கெட்டுகள் மற்றும் தள்ளுபடி கூப்பன்களை உள்ளடக்கிய திட்டங்களைக் கொண்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி - யங் ஸ்டார் அக்கவுண்ட்
இந்தக் கணக்கை பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ளவர்கள் தொடங்கலாம். குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் ஐ சி ஐ சி ஐ வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டியது அவசியம்
அவ்வாறு இல்லையெனில், பெற்றோருக்கும் குழந்தைக்கும் வெவ்வேறு கணக்குகளை ஒரே நேரத்தில் துவங்கலாம்.
ஐசிஐசிஐ வங்கி - ஸ்மார்ட் ஸ்டார் அக்கவுண்ட்
இந்தக் கணக்கை பத்து வயதுக்கு மேற்பட்டோர் தாங்களே துவங்கி அதனை நிர்வகிக்கவும் செய்யலாம். மாதாந்திர சராசரி இருப்பாக 2500 ரூபாய்களை வைத்திருக்கவேண்டியது இந்தக் கணக்கிற்கு அவசியம்.
ஆக்சிஸ் வங்கி - பியூச்சர் ஸ்டார் அக்கவுண்ட்
இந்தச் சேமிப்புக் கணக்குத் திட்டம் 18 வயதிற்குட்ட்பட்டவர்களுக்கான ஒரு சிறப்புத் திட்டம். பெருநகரங்களில் இந்தக் கணக்கிற்கான குறைந்த பட்ச மாத இருப்பு 2500 ரூபாய்.
தனி நபர்கள் தங்கள் கணக்கிலிருந்து தங்கள் குழந்தைகள் கணக்கிற்கு மாதாமாதம் அல்லது வாராவாரம் தொடர்ச்சியாகப் பணம் செலுத்த தானாகவே பரிமாற்றம் செய்யும் வசதியும் உள்ளது.
ஐடிபிஐ வங்கி பவர் கிட்ஸ் அக்கவுண்ட்
ஐ டி பி ஐ வங்கியின் இந்தக் கணக்கில் ரூபாய் 500 மட்டும் குறைந்த பட்ச இருப்பாக வைத்தல் போதும். காலாண்டு குறைந்தபட்ச சராசரி இருப்பிற்கென்று எந்தக் கட்டணமும் இல்லை. இந்த வங்கி 2000 ரூபாய் வரையிலான பணம் எடுப்பு அல்லது செலவிற்கு அனுமதி வழங்குகிறது.
பிற வங்கிகள்
இது போன்ற கணக்குகளை யுனைடட் பேங்க் ஆப் இந்தியா, கரூர் வைஸ்யா வங்கி, சிட்டி பேங்க் மற்றும் ஹெச்டிஎப்சி பாங்க ஆகிய வங்கிகளும் வழங்குகின்றன.