டெல்லி: இந்தியாவில் தொடர்ந்து இரண்டு வருடமாகப் பருவ மழை குறைந்துள்ளதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவை உலகின் பல அமைப்புகள் குறைத்துள்ளது.
தற்போது மார்கன் ஸ்டான்லி நிறுவனமும் இந்தியா பொருளாதார வளர்ச்சிக்கான அளவீடுகளைக் குறைத்துள்ளது. இதனால் சர்தேச முதலீட்டாளர்கள் மத்தியில் இந்திய சந்தையின் முதலீடு அளவீடு பாதிக்கப்படும்.
நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) அளவு 7.5 சதவீதமாகக் குறையும் எனக் கணித்துள்ளது. முன்னதாக மார்கன் ஸ்டான்லி நிறுவனம் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.9 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பருவநிலை மாற்றம், உள்நாட்டுத் தேவை குறைவு, மந்தமான நிலையில் உற்பத்தித் துறை ஆகிய காரணங்களுக்காக ஜிடிபி வளர்ச்சி குறையும் என்று மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
தேவைகள் தொடர்ந்து குறைந்து வருவதாலும், மத்திய அரசின் மறு விநியோக கொள்கைகளால் கிராமப்புறங்களில் நுகர்வு விகிதம் குறைவு போன்ற காரணங்களால் வளர்ச்சி விகிதம் பின்னடைவை சந்திப்பதாக மார்கன் ஸ்டான்லி கூறியுள்ளது.
சமீபத்திய மழை அளவு குறைந்துள்ளதால் விவசாய வளர்ச்சி கவலையளிப்பதாகவும், இதன் காரணமாகக் கிராமப்புற நுகர்வு விகிதம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் எதிர்பார்ப்பை மறுஆய்வு செய்துள்ளோம், 2016 நிதியாண்டில் முன்பு எதிர்பார்க்கப்பட்ட ஜிடிபி வளர்ச்சி 7.9 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2017 ஆம் நிதியாண்டில் ஜிடிபி 8.1 சதவீதமாக இருக்கும். இது இதற்கு முன்பு 8.4 சதவீதமாகக் கணிக்கப்பட்டிருந்தது என்று மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் ஆசிய பகுதியின் முதன்மை பொருளாதார வல்லுநர் சேத்தன் அய தெரிவித்தார்.