மும்பை: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வர்த்தகச் செயல்பாடு மற்றும் நிறுவன செயல்பாடுகளை மேம்படுத்த ரிசர்வ் வங்கி, இவ்வங்கியின் மீது சீர்திருத்த நடவடிக்கையை அமல்படுத்தியுள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மும்பை பங்குச் சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் ஆர்பிஐயின் இத்தகைய நடவடிக்கையைக் குறித்துத் தெரிவித்திருந்தது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
வங்கியின் வர்த்தகத்தை மேம்படுத்தவும், நிர்வாகச் செயல்பாட்டைச் சீர்ப்படுத்துவதற்காகவே ஆர்பிஐ இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக ஐஓபி வங்கி நிர்வாகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது.
சீர்திருத்த நடவடிக்கை
இவ்வங்கியில் வராக் கடன் அளவு அதிகளவில் உயர்ந்துள்ளதால், வங்கியின் நிதிநிலையை மேம்படுத்த ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது. இதற்காகவே இந்த "Prompt Corrective Action" எனப்படும் சீர்திருத்த நடவடிக்கையை அமலாக்கம் செய்துள்ளதாக வங்கித்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
வராக் கடன்
ஜுன் 30ஆம் தேதி முடிவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வராக் கடன் அளவு 16,451 கோடியாக உயர்ந்து 60 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு 10,350 கோடி ரூபாயாக இருந்தது.
9.4 சதவீத சொத்துக்கள்
மொத்த வங்கி செயல்பாட்டில் (கடன், டெபாசிட் என அனைத்தும்) 9.4 சதவீத சொத்துக்கள் வராக்கடனாக உள்ளது.
மும்பை பங்குச் சந்தை
இத்தகைய நடவடிக்கையின் மூலம் மும்பை பங்குச்சந்தையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பங்கு மதிப்பு 0.27 சதவீதம் சரிந்து 37.25 ரூபாயாக உள்ளது.