மும்பை: அமெரிக்கப் பெடரல் வங்கி வியாழக்கிழமை நடத்திய கூட்டத்தில் தனது வட்டி விகிதத்தை உயர்த்தும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கத் திட்டமிட்டதுள்ளதாக அறிவிப்புகள் வெளியானதை அடுத்து, இந்திய மற்றும் ஆசிய பங்குச்சந்தைகள் இன்று சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
இதனால் வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்திலும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வர்த்தகம் துவங்கும் முதலே 300 புள்ளிகள் உயர்வுடன் வெள்ளிக்கிழமை வர்த்தகம் துவங்கியது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 233 புள்ளிகள் உயர்ந்து 27,079.51 புள்ளிகளை எட்டி சந்தை வர்த்தகம் முடிவடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு மதிய நேர வர்த்தகத்தில் சில புள்ளிகளை இழந்தாலும், 60.35 புள்ளிகள் உயர்வில் 8,189.70 புள்ளிகளை எட்டியது.
சர்வதேச சந்தையில் இன்று ஜப்பான், சீனா, ஹாங்காங் ஆகிய சந்தைகள் 1 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வை சந்தித்து வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.