பெங்களூரு: நாட்டின் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் 5 நாள் தள்ளுபடி விற்பனை இன்று துவங்கியுள்ளது.
பிக் பில்லியன் டேஸ் விற்பனை சில தொழில்நுட்ப கோளாறுகளோடு துவங்கினாலும் சில நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
முதல் நாள் விற்பனையில் முதல் 10 மணிநேரத்தில் 10 லட்சம் பொருட்கள் விற்பனை செய்து கலக்கியுள்ளது பிளிப்கார்ட். இந்தியா முழுவதும் சுமார் 6 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு ஒரு நொடிக்கு 25 பொருட்களைப் பிளிப்கார்ட் விற்பனை செய்து ஈகாமர்ஸ் சந்தையை அசத்தியுள்ளது.
இதில் பெங்களூரு, டெல்லி, மற்றும் சென்னை பகுதியில் தான் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் இத்தளத்தில் இருந்து ஷாப்பிங் செய்துள்ளதாகப் பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விற்பனை அறிவிப்பின் காரணமாகக் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 16 லட்சம் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் ஆப்களை இன்ஸ்டால் செய்துள்ளதாக இந்நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த 5 நாட்களில் இந்நிறுவனம் 70 பிரிவுகளில் சுமார் 30 மில்லியன் பொருட்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.