டெல்லி: இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் நீங்கா இடம் பிடித்துள்ள வோடாபோன் நிறுவனம், பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான பணிகளைச் செய்து வருவதாக இந்நிறுவன சீஇஓ விட்டோரியோ கோலோ அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
பங்குச்சந்தையில் பட்டியலிடுவதன் மூலம் வோடபோன் நிறுவனம் இந்திய வர்த்தகத்திற்குத் தேவையான நிதியைத் திரட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஆனால் எப்போது செபியிடம் இதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் என்பது குறித்து எந்த விதமான தகவல்களையும் விட்டோரியோ தெரிவிக்கவில்லை.
வோடபோன்
ஏர்டெல் நிறுவனத்திற்குப் பிறகும் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை வைத்துள்ளது வோடபோன் நிறுவனம் தான். இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் சுமார் 10 சதவீத வர்த்தகத்தை வோடபோன் வைத்துள்ளது.
எங்கள் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகத்தில் டாப் 5 முக்கியச் சந்தைகளில் இந்தியாவும் ஒன்று என விட்டோரியோ தெரிவித்தார்.
சந்திப்பு
பங்குச்சந்தையில் பட்டியலிடுவது, முதலீடு குறித்துப் புதன்கிழமை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோரை விட்டோரியோ, சந்தித்தார்.
வோடபோன் - ஏர்டெல்
இந்தியாவில் சிறந்த மொபைல் மற்றும் தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் டாப் 3 நிறுவனங்களில் ஏர்டெல் முதல் இடத்திலும், வோடபோன் 2ஆம் இடத்திலும் உள்ளது.
ஏர்டெல் நிறுவனத்திற்கு இணையாக இந்திய சந்தையில் வளர்ச்சி அடையப் பங்குச்சந்தையின் மூலம் நிதி திரட்டும் திட்டத்தில் வோடபோன் இந்தியா இறங்கியுள்ளது.
டிஜிட்டல் புரட்சி
இந்தியாவில் தற்போது நிகழ்ந்து வரும் டிஜிட்டல் புரட்சியில் முக்கியப் பங்கு வகிக்க இந்தியாவிலும், இந்திய சந்தை வர்த்தகத்திலும் அதிகளவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளோம் எனவும் அவர் கூறினார்.
80,000 கோடி முதலீடு..
வோடபோன் நிறுவனம் இந்தியாவில் இதுவரை சுமார் 80,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளிலும் குறைந்தபட்சம் 8,500 கோடி ரூபாய் நிதியை முதலீடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகத் தொலைத்தொடர்பு சேவையில் இயந்திரங்கள் மத்தியிலான இணைப்பு, இண்டர்நெட் திட்டங்கள் மற்றும் எண்டர்பிரைசர்ஸ் மொபிலிட்டி போன்றவற்றில் வோடபோன் சிறந்து விளங்குகிறது.
நிறுவன இணைப்பு
வோடாபோன் வளர்ந்து வரும் பல நிறுவனங்களுடன் இணைந்துள்ளதால் எண்டர்பிரைஸ் பிரிவின் வர்த்தகம் சுமார் 20 சதவீதம் வளர்ந்து வருகிறது.