டெல்லி: இந்தியாவில் நான்காவது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான எச்.சி.எல் நிறுவனம் செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் லாபத்தில் 2.7 சதவீத சரிவில் 1,823 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
இதனால் முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தின் பங்குகள் மீதான முதலீட்டை அதிகளவில் இன்று குறைத்துள்ளனர்.
லாபம் அளவுகள்
எச்.சி.எல் நிறுவனம் மும்பை பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில், செப் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகளைச் சமர்ப்பித்தது.
இதில் கடந்த நிதியாண்டின் இதேகாலக்கட்டத்தில் 1,873 கோடி ரூபாய் அளவு லாபம் பெற்றுள்ள எச்.சி.எல் நிறுவனம் தற்போது 2.7 சதவீத சரிவில் 1,823 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.
என்ன காரணம்
ஏற்கனவே இந்நிறுவனம் அறிவித்ததைப் போல், சர்வதேச சந்தையில் நிலவிய நாணய மதிப்பீடுகள் மற்றும் முக்கிய வாடிக்கையாளர்களுடனான பிரச்சனை போன்றவையின் காரணமாக லாப அளவீடு சரிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மொத்த வருவாய்
இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவுகள் 15.6 சதவீதம் உயர்ந்து 10,097 கோடி ரூபாயாக உள்ளது.
டாலர் வருவாய்
செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைந்த காலகட்டத்தில் டாலர் வருவாய் 7.7 சதவீதம் உயர்ந்து 1.54 பில்லியன் டாலராக இருந்தாலும், லாப அளவுகளில் 9.3 சதவீதம் குறைந்து 278.5 மில்லியன் டாலராக உள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
இக்காலாண்டில் இந்நிறுவனத்தில் இருந்து சுமார் 536 ஊழியர்கள் வெளியேறியுள்ள நிலையில், மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 1,05,571 ஆக உள்ளது.
ஈவுத்தொகை..
இந்நிறுவனப் பங்கு முதலீட்டாளர்களுக்கு 2 ரூபாய் முக மதிப்புக் கொண்ட பங்குகளுக்கு 5 ரூபாய் ஈவுத்தொகை கொடுக்கப்பட உள்ளதாக எச்.சி.எல் நிறுவனம் வெளியீட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.