மும்பை: நாட்டின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ, ஐபிஓவில் முதலீட்டாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று, வெற்றிகரமான பங்குச்சந்தையில் கடந்த செவ்வாய்க்கிழமை பட்டியலிடப்பட்டது.
செவ்வாய்க்கிழமை பட்டியலிடப்பட்ட இண்டிகோவிற்குப் புதன் மற்றும் வியாழக்கிழமை பங்குச்சந்தை விடுமுறையாக அமைந்தது. இது இண்டிகோ நிறுவனத்திற்குச் சோகமான விஷயமாக இருந்தாலும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாள் வர்த்தகத்தில் மட்டும் இந்நிறுவனப் பங்குகள் சுமார் 20% வரை உயர்ந்து அசத்தியுள்ளது.
முதல் நாள் வர்த்தகத்தில் இந்நிறுவனப் பங்குகள் 15 சதவீதம் வரை உயர்வடைந்து 10% உயர்வில் வர்த்தகம் முடிவடைந்தது.
ஒரு பங்கின் விலை 765 ரூபாய் என்ற வெளியிடப்பட்ட இண்டிகோ நிறுவனப் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 8.6% உயர்வுடன் 1,003 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
முதல் நாள் வர்த்தகத்தில் 50.66 லட்சம் பங்கு பரிவர்த்தனை நடந்தது. செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 31,655 கோடி ரூபாயாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஐபிஓ மூலம் இண்டிகோ நிறுவனம் சுமார் 1,272 கோடி ரூபாய் வரை நிதி திரட்டியது. கடந்த மூன்று வருடங்களில் வெளியான மிகப்பெரிய ஐபிஓ இதுவாகும்.