மும்பை: மிகப்பெரிய வர்த்தக மற்றும் நிதி நெருக்கடிகளைச் சமாளித்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள ஸ்பைஸ்ஜெட், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்நிறுவனப் பங்குகள் சுமார் 300 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் சர்வதேச விமான நிறுவனப் பங்குகளில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டாராக விளங்குகிறது.
இந்நிறுவன நிறுவன வளர்ச்சி உறுதுணையாகக் கச்சா எண்ணெய் விலை குறைவு மற்றும் பயணிகள் விமானப் போக்குவரத்தில் திடீர் உயர்வை ஆகியவை மிகவும் சாதகமாக அமைந்தது.
சூப்பர் ஸ்டார் ஸ்பைஸ்ஜெட்..
அஜய் சிங் தலைமையிலான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த ஒரு வருடத்தில் ஈஎல் ஏஐ இஸ்ரேல் ஏர்லையன்ஸ், ஹூவாய்ன் ஹோல்டிங்ஸ், சீனா சதர்ன் ஏர்லையன்ஸ் மற்றும் குவான்டாஸ் ஏர்வேஸ் ஆகிய நிறுவனப் பங்குகளை ஓரம்கட்டி 340 சதவீத உயர்வுடன் முன்னிலை வகிக்கிறது என ப்ளூம்பெர்க் டேட்டா தெரிவித்துள்ளது.
இண்டிகோ
இந்தியாவில் தொடர்ந்து லாபகரமான நிலையில் இயங்கி வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் கடந்த நவ.10ஆம் தேதி ஐபிஓ மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. கடந்த 15 நாட்களில் இந்நிறுவனப் பங்குகள் 42 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளது.
டிசம்பர் காலாண்டு முடிவுகள்
ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ நிறுவனத்தைப் போலப் பிற விமான நிறுவனப் பங்குகளும் தொடர்ந்து உயர்வு பாதையில் உள்ளது. மேலும் குறைவான கச்சா எண்ணெய் விலை, குறைவான விமானக் கட்டணம், அதிகளவிலான தள்ளுபடிகள் மூலம் இந்திய விமான நிறுவனங்கள் அதிகளவிலான பயணிகளைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் விமான நிறுவனங்களின் டிசம்பர் மாதம் முடிவடையும் காலாண்டில் அதிகளவிலான வளர்ச்சி மற்றும் லாபத்தைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனப் பங்குகள்
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனப் பங்குகள் 69.05 ரூபாய்க்கு முடிவடைந்து தனது 52 வார உயர்வான 72.50 ரூபாயை எட்டும் நிலைக்கு வந்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ்
அதேபோல் இந்தியாவில் விமானச் சந்தையில் 2ஆம் இடத்தில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நேற்று 2.28 சதவீத உயர்வில் 478 ரூபாய் என்ற நிலையை அடைந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், கடந்த 3 மாதமாகத் தொடர்ந்து உயர்வு பாதையில் உள்ள ஜெட் ஏர்வேஸ் பங்குகள்.
உண்மையான நிலை..
ஸ்பைஸ்ஜெட் நிறுவனப் பங்குகள் பங்குச்சந்தையில் சிறப்பாகச் செயல்பட்டாலும், முதலீட்டு ஆய்வாளர்கள் இந்நிறுவனப் பங்குகளைக் குறைந்த அளவில் மட்டுமே மதிப்பிடுகிறது.
இதற்கு முக்கியக் காரணமாக நிர்வாகத்தில் ஸ்திரமற்ற தன்மை மற்றும் பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் வளர்ச்சி ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள் சந்தை வல்லுநர்கள்.