மும்பை: மேற்கு இந்திய மாநிலங்களில் குருநானக் ஜெயந்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவதால் மும்பை பங்குச்சந்தை, கடன் சந்தை மற்றும் நாணய சந்தைகளுக்குப் புதன்கிழமை(இன்று) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் பங்குச்சந்தை வர்த்தகம் நாளை வியாழக்கிழமை முதல் துவங்கும்.
ஆசிய சந்தையில் நிலவும் மந்தமான வர்த்தகம் மற்றும் மும்பை பங்குச் சந்தையில் நவம்பர் மாதத்திற்கான ஆர்டர் முடிவு ஆகியவற்றின் காரணமாகச் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் சரிவுடன் முடிந்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 43.60 புள்ளிகள் சரிவில் 25,775.74 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 17 புள்ளிகள் சரிவில் 7,831.60 புள்ளிகளை அடைந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்நிலையில் நேற்றைய வர்த்தக முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 66.32 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தைவான் நாட்டுச் சந்தைகள் இன்று (புதன்கிழமை) சரிவுடன் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.