சென்னை: கடந்த இரண்டு வருடமாக இந்திய பங்குச்சந்தையும், தங்கத்தின் விலையும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படாமல் எதிர்மறையாக இயங்கி வருகிறது.
இதுவே பிரதமரின் தங்க முதலீட்டுத் திட்டத்தின் தோல்விக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. எப்படி.. வாங்கப் பார்ப்போம்.
பங்குச்சந்தை.. தங்கம் விலை...
கடந்த 2 வருடத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் சுமார் 25 சதவீதம் வரை உயர்ந்ததுள்ள நிலையில் MCX சந்தை மற்றும் சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை சுமார் 15% மற்றும் 17% வரை தத்தம் சரிவைச் சந்தித்ததுள்ளது.
இதனால் தங்கத்தின் மீதான முதலீட்டில் லாபம் மிகக் குறைவாகவும், சில சமயங்களில் நஷ்டத்தையும் முதலீட்டாளர்கள் சந்தித்தனர்.
மஞ்சள் உலோகம்
மஞ்சள் உலோகமான தங்கத்தில் குறைவான லாபம் கிடைப்பதால் முதலீட்டாளர்கள் இதன் மீதான முதலீட்டை ஒத்திவைத்தனர். இதனால் தங்கம் விலை இந்திய மற்றும் சர்வதேச சந்தையில் தொடர்ந்து குறைந்த வண்ணமாகவே உள்ளது.
மத்திய அரசின் திட்டம்
இத்தகைய சூழ்நிலையில் தான் மத்திய அரசு இந்திய வீடுகளில் இருக்கும் தங்கத்தைச் சந்தைப்படுத்தவும், இதற்கான முதலீட்டில் 2.4 சதவீதம் வரை வட்டி அளிக்கவும் GMS எனப்படும் தங்க நாணயமாக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தங்கச் சவரன் திட்டம்
அதேபோல் மத்திய அரசு அறிவித்த தங்க சவரன் திட்டமும் தங்கம் விலை குறையும் வேளையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் மக்களிடம் பெரிய அளவிலான வரவேற்பு கிடைக்கவில்லை.
இன்றுவரை மத்திய அரசு இத்திட்டத்தின் கீழ் 60 கிலோ தங்க விற்பனையின் மூலம் வெறும் 150 கோடி ரூபாய் நிதியை திரட்டியுள்ளது.
தங்க நாணயமாக்கும் திட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட இத்திட்டத்தில் 2 வாரக் காலத்தில் வெறும் 400 கிராம் தங்கம் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது என GJEPC அமைப்பு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தை மேலும் பிரபல படுத்த இந்தியாவில் உள்ள 13,000 பிஐஎஸ் தரச் சான்றிதழ் பெற்ற நகை கடைகளைக் கலக்டிங் ஏஜென்டாக அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இதன் எண்ணிக்கை வெறும் 35-40 ஆக மட்டுமே உள்ளது.
லட்சுமி ஐயர்
5 வருடங்களுக்கு முன்னாள் தங்கம் மற்றும் பங்குச்சந்தை இயல்பான நிலையில் இருந்தது. ஆனால் கடந்த 2 வருடமாக முதலீட்டாளர்கள் கூட்டம் கூட்டமாகப் பங்குச்சந்தை மீதான முதலீட்டில் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதனால் தங்கம் மீதான முதலீடு ஆபத்து எனக் கூறும் அளவிற்கு உருமாறியுள்ளது எனக் கோட்டாக் அசர்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரி லட்சுமி ஐயர் தெரிவித்தார்.
பெடரல் வங்கி
தங்கம் மீதான முதலீட்டை மேலும் கடுமையாக்கும் வகையில் அமெரிக்கப் பெடரல் வங்கி கடந்த 10 வருடங்களாக உயர்த்தாத வட்டி விகிதத்தைத் தற்போது உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் அமெரிக்கச் சந்தையிலும் அரசு சார்ந்து பத்திரங்களிலும் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இதன் காரணமாகத் தங்கம் மீதான முதலீட்டு அளவு வரலாறு காணாத அளவிற்குச் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலை அடுத்தச் சில மாதங்கள் வரை தொடரும்.