டெல்லி: மத்திய தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது வை-பை இண்டர்நெட் சேவையை விரிவாக்கம் செய்யும் வகையில், ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா கட்டுப்பாட்டில் இருக்கும் விமான நிலையங்களில் வை-பை சேவையை அளிக்கத் திட்டமிட்டுள்ளது.
மேலும் வை-பை சேவை அளிக்கும் பணியில் பிஎஸ்என்எல் மற்றும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா தற்போது இறங்கியுள்ளது.
பிஎஸ்என்எல்
ஏஏஐ எனப்படும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அமைப்பிடம் இத்திட்டம் குறித்து அணுகிய போது எவ்விதமான தடையும் மறுப்பும் இன்றி ஒப்புதல் அளித்தது. மேலும் ஏஏஐ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பிஎஸ்என்எல் நிறுவன சேவையை அமைக்கவும் விரிவாக்கம் செய்யவும் ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான ஆணையும் விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது எனப் பிஎஸ்என்எல் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனுபம் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.
ஏஏஐ அமைப்பு
இந்தியாவில் ஏஏஐ அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 121 விமான நிலையங்கள் உள்ளது, இதில் 11 சர்வதேச விமான நிலையங்களும் அடக்கம்.
கோயம்புத்தூர்
தற்போதைய நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் போப்பால் மற்றும் கோயம்புத்தூரில் 4-5 விமான நிலையங்களில் வை-பை இண்டர்நெட் சேவை அளித்து வருகிறது.
டாடாவுடன் கூட்டு..
மேலும் சில முக்கியமான விமான நிலையங்களில் வை-பை சேவை அளிப்பதில் பிஎஸ்என்எல் நிறுவனம் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்துடன் இணைய உள்ளது.
2,500 வை-பை முனையங்கள்
2015ஆம் நிதியாண்டுக்குள் சுமார் 2,500 வை-பை முனையங்களை அமைக்கப் பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியே இந்த விமான நிலையங்கள்.