மும்பை: ரெப்போ விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லாமல் 6.75 சதவீதமாக 2015ஆம் நிதியாண்டின் 4வது இருமாத நாணய மறுஆய்வு கொள்கையை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
7வது சம்பள கமிஷனின் அமலாக்கம், நாட்டின் சில்லறை பணவீக்கத்தின் தொடர் உயர்வு மற்றும் பணவாட்ட நிலையைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் இம்முறை எவ்வித மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளது.
ரெப்போ விகிதம்
ரிசர்வ் வங்கி கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்ட நாணய கொள்கையில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காக வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடன் அளவான ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.75 சதவீதமாக அறிவித்தது.
அதுமட்டும் அல்லாமல் கடந்த ஒரு வருடத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைச் சுமார் 1.25% வரை குறைத்துள்ளது.
இந்நிலையில் இன்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட கொள்கையில் பணவீக்கத்தின் பாதிப்பை கருத்தில் கொண்டு மாற்றங்கள் ஏதுமில்லாமல் 6.75 சதவீதமாக அறிவித்துள்ளது.
சிஆர்ஆர்
cash reserve ratio எனப்படும் சிஆர்ஆர் விகிதமும் மாற்றம் இல்லாமல் ரிசர்வ் வங்கி 4 சதவீதமாக அறிவித்துள்ளது.
சம்பள கமிஷன்
நாட்டில் 7வது சம்பள கமிஷன் மத்திய அரசு அமலாக்கும் செய்ய உள்ளதால் நாட்டின் பொருளாதார நிலையைக் கணித்தபின் அடுத்த நாணய கொள்கையில் ரெப்போ விகித்தை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி
மேலும் 2015ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் எனவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
நுகர்வோர் பணவீக்கம்
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைத் தீர்மானம் செய்ய முக்கியக் காரணியாக விளங்கும் நுகர்வோர் பணவீக்கம் தொடர்ந்து 3 மாதம் உயர்வில் அக்டோபர் மாதம் 5 சதவீதமாக உயர்ந்திருந்தது. இதற்கு முக்கியக் காரணம் உணவுப் பொருட்களின் பணவீக்கம் தான்.
மொத்த விலை பணவீக்கம்
நுகர்வோர் பணவீக்கம் இந்திய சந்தைக்குச் சாதகமாக இருக்கும் நிலையில் மொத்த விலை பணவீக்கம் குறைவான கச்சா எண்ணெய் விலையின் காரணமாக -3.81 சதவீதமாகப் பணவாட்ட நிலையில் உள்ளது. மேலும் கடந்த 12 மாதங்களாக மொத்தவிலை பணவீக்கம் பணவாட்ட நிலையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
இலக்கு
மேலும் ரிசர்வ் வங்கியின் இலக்கான 6 சதவீத பணவீக்கம் ஜனவரி மாதத்தில் எட்ட டிசம்பர் மாத நாணய கொள்கையில் எவ்விதமாற்றமும் அறிவிக்க வாய்ப்புகள் இல்லை.