மும்பை: இந்தியாவின் 3வது மிகப்பெரிய இருசக்கர வாகன விற்பனை நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ், சென்னையில் நிலவி வரும் தொடர் மழை வெள்ளத்தால் விற்பனை முழுவதும் பாதிக்கப்பட்டு மும்பை பங்குச்சந்தையில் இந்நிறுவனப் பங்குகள் சுமார் 4.87 சதவீதம் வரை சரிந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை எண்ணிக்கை 2.43 சதவீதம் அதிகரித்து 2,25,401 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 3 வாரமாகத் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் விற்பனை அதிகளவில் குறைந்ததுள்ளது.
மேலும் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் தயாரிப்பு பணிகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இக்காலகட்டத்தில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் மட்டும் சுமார் 15,000 வாகனங்களின் விற்பனை குறைந்துள்ளது என டிவிஎஸ் மோட்டார்ஸ் நிர்வாகம் தெரிவித்தள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 5% சரிவில் 288 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இதேபோல் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அசோக் லேலண்ட், சுந்தரம் கிலேடன் ஆகிய நிறுவனங்களுக்கு தேசிய பங்குச்சந்தையில் சரிவை சந்தித்தது.