சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தமிழகத்தின் பிற முக்கியப் பகுதிகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வர மக்கள் மட்டும் அல்லாமல் மத்திய அரசு உட்பட அனைத்துத் துறை சார்ந்தவர்களும் நிதி மற்றும் பொருள் உதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ், இந்தியா சிமென்ட்ஸ் போன்ற பல நிறுவனங்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்குக் கோடிக்கணக்கில் நிவாரண நிதியை அளித்துள்ளனர். வாங்க யார் யார் எவ்வளவு கொடுத்தாங்கனு பார்ப்போம்..
டிவிஸ்
நாட்டின் 3வது மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவன டிவிஸ் நிறுவன தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் 5 கோடி ரூபாயும், டஃபே நிறுவனத்தின் தலைவர் மல்லிகா ஸ்ரீனிவாசன் 3 கோடி ரூபாயும் நிவாரண நிதியாகத் தமிழக முதல்வரை சந்தித்து அளித்தனர்.
இந்தியா சிமெண்ட்ஸ்
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது மகள் ஆகியோர் தமிழக முதல்வர் சந்தித்து 2 கோடி ரூபாய் நிவாரண நிதியை அளித்தார்.
ஹூண்டாய்
இந்தியாவில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்டோமொபைல் மற்றும் கார்களைத் தயாரித்து வரும் ஹூண்டாய் நிறுவனத்தைத் தலைவர் ஓய்.கே கூ முதல்வர் அவர்களைச் சந்தித்து ரூ.2 கோடி நிவாரண நிதியை அளித்தார்.
ஜோய் அலூக்காஸ்
நாட்டின் முன்னணி நகை விற்பனை மற்றும் ஏற்றுமதி நிறுவனமான ஜோய் அலூக்காஸ் முதலமைச்சர் நிவாரண நிதி கணக்கிற்கு 3 கோடி ரூபாய் நிவாரண நிதியை அளித்தார்.
சிட்டி யூனியன் வங்கி
வங்கிச் சேவையில் சென்னையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சிட்டி யூனியன் வங்கி தலைவர் காமகோட்டி முதலமைச்சர் நிவாரண நிதி கணக்கிற்கு 1 கோடி ரூபாய் காசோலையை முதலமைச்சரைச் சந்தித்து அளித்தார்.
அம்ரிதாநந்தமயி
சத்குரு ஸ்ரீ மாதா அம்ரிதாநந்தமயி தேவி சார்பில், மாதா அம்ரிதாநந்தமயி மடத்தின் அறங்காவலர் சுவாமி ராமகிருஷ்ணாநந்தா புரி 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
நிவாரண நிதி
தமிழகத்தில் கனமழை பாதிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் குடிசைகளை இழந்த குடும்பங்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்கவும், நிரந்தர வீடுகளில் வசித்து வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கால்நடை இழந்தோருக்கு, கால்நடை இழப்பிற்கு 30,000 ரூபாய், ஆடு மற்றும் பன்றி இழப்பிற்கு 3,000 ரூபாய் மற்றும் கோழி இழப்பிற்கு 100 ரூபாய் என்ற வீதத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
33 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் சேதமுற்ற நெல் மற்றும் நீர்ப்பாசனம் பெறும் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500 ரூபாய்; மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,410 ரூபாய்; நீண்டகாலப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 18,000 ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணம் வழங்கப்படும்.
அமுல் பேபி
அமுல் நிறுவனம் அதிமுகவினர் நிவாரணப் பொருட்கள் மீது அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டியதைக் கிண்டல் செய்து கார்டூன் வெளியிட்டுள்ளது.
அம்மா-வை பார்த்து அமுல் பேபி பயப்படாது போல..