டெல்லி: கொடிய நோய்களான புற்றுநோய், நீரிழிவு, இதய நோய்களுக்கான மருந்துகள் உள்ளிட்ட 439 மருந்துகளை மலிவு விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுமக்களுக்கு மலிவு விலையில் மருந்து கிடைக்கச்செய்யும் வகையில் நாடு முழுவதும் 121 ஜன் ஔஷாதி கடைகள் மத்திய அரசு சார்பில் திறக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் 45 வகையான மருந்துகள் மட்டுமே இருக்கின்றன. இது பொதுமக்கள் தேவைக்கு போதுமானதல்ல. எனவே, முக்கியமான மருந்துகள் இந்த கடைகளில் கிடைக்க பிரதமர் அலுவலக மேற்பார்வையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கொடிய நோய்களான புற்றுநோய், நீரிழிவு, இதய நோய்களுக்கான மருந்துகளும் மலிவு விலையில் இந்த கடைகளில் கிடைக்கச்செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதற்கான திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, மருந்து நிறுவனங்களில் இருந்து மத்திய அரசே நேரடியாக குறைந்த விலையில் கொள்முதல் செய்து ஜன் ஔஷாதி கடைகளுக்கு அனுப்பும். 439 மருந்துகள் குறைந்த விலைக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
மார்ச் மாதத்தில் இருந்து இது நடைமுறைக்கு வரும் என ஜன் ஔஷாதி திட்டத்துடன் தொடர்புடைய மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, இந்த கடைகளில் சுமார் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை மருந்துகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மருந்து மட்டுமின்றி நோயாளிகளுக்கு தேவைப்படும் 200 முதல் 250 மருத்துவ உபகரணங்களும் குறைந்த விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஜன் ஔஷாதி கடைகளின் எண்ணிக்கையை வரும் மார்ச் மாதத்துக்குள் 300ஆக உயர்த்தவும், 2017ம் ஆண்டுக்குள் 3 ஆயிரமாக அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஜன் ஔஷாதி கடைகள் இதுவரை திறக்கப்படவில்லை.