சென்னை: முக்கிய நகரங்களில் உள்ள சினிமா தியேட்டர்கள், ஹோட்டல்கள், வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவைகளை 24 மணி நேரம் (24/7) திறந்திருப்பதற்கும் இயங்குவதற்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சட்டத்தில், பெண்கள் இரவு நேரங்களில் வேலை செய்வதற்குரிய வசதிகளையும் இரவு நேரங்களில் பணிபுரியும் பெண்களுக்கு நிறுவனங்கள் வாகன வசதி, பாதுகாப்புகளை ஏற்பாடு செய்து தருவதை கட்டாயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அமைச்சகம் மற்றும் மத்திய அரசு துறைகளின் கருத்துகளை கேட்பதற்காக கடைகள் மற்றும் நிறுவனங்கள் (வேலைவாய்ப்பு மற்றும் சேவை நிபந்தனைகள் கட்டுப்பாடு) சட்டத்திற்கான (2015) வரைவை அரசாங்கம் அனுப்பியுள்ளது. மேலும் இந்த மாதிரி சட்ட வரைவை மாநிலங்கள் தங்களுக்கு ஏற்ப மாற்றிகொள்ள முடியும்.
1 மணிவரை சினிமா
இப்போது ஷாப்பிங் மால்களில் உள்ள தியேட்டர்களில் இரவு 1 மணிவரை காட்சிகள் ஒளிபரப்பாகின்றன. இதற்காகவாவது 1மணிவரை மால்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் உணவகங்கள் 11 மணியோடு மூடப்பட்டு விடுகின்றன. இனி விடிய விடிய திறந்திருக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்போகிறது மத்திய அரசு
365 நாட்களும் வேலை
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொழிலாளர் துறை செயலாளர் சங்கர் அகர்வால், அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் வராது என்றும், மால்கள், சினிமா தியேட்டர்கள், ஐ.டி நிறுவனங்கள் 24 மணி நேரமும், வருடத்தின் 365 நாட்களும் வேலை செய்ய அனுமதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். நாங்கள் மாநிலங்களுக்கு ஆலோசனை களை வழங்க இருக்கிறோம். இதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை. இதை மாநிலங்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளலாம் இல்லையென்றால் மாற்றங்கள் கொண்டு வரலாம்" என்றும் சங்கர் அகர்வால் கூறியுள்ளார்.
சேவைத்துறை வருமானம்
கடைகள் மற்றும் நிறுவனங்கள் இது தொடர்பான மற்ற சட்டங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். சேவைத் துறையின் வருமானம் உயர இந்த மாற்றம் உதவும் என்றும் சங்கர் அகர்வால் கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கிக்கு பொருந்தாது
தற்போது தொழிற்சாலைகள் சட்டம் 1948-ன் கீழ் வராத நிறுவனங்கள், அச்சு இயந்திர கடைகள், வங்கிகள், சினிமா அரங்குகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் உள்ளடக்கிய அனைத்திற்கும் அனுமதி வழங்க இந்த வரைவு சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த சட்டம் அரசு அலுவலகங்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகிய இரண்டிற்கும் பொருந்தாது என்றும் சங்கர் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இனி விடிய விடிய சினிமாதான்
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் 24 மணிநேரமும் பேங்க் போகலாம்... விடிய விடிய ஹோட்டல்ல சாப்பிடலாம்.. தியேட்டர்ல சினிமா பார்க்கலாம். ஆனால் அதுக்கு பாக்கெட்ல பணம் இருக்கணும். அதோடு சட்டம் ஒழுங்கும் சரியா இருக்கணும்ல.