சென்னை: வெங்காயம், தக்காளி கிலோ 20 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விளைச்சல் அதிகரிப்பு மற்றும் சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளதன் எதிரொலியாக காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை மேலும் குறைந்துள்ளது.
ஒரு கிலோ சாம்பார் வெங்காயம், பெரிய வெங்காயம் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் கிலோ 15 முதல் 20க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் நிரம்பி வழிந்தன. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் காய்கறிகள், பழங்களை பயிரிட்டதன் காரணமாக அமோக விளைச்சல் அடைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது காஞ்சீபுரம், ஒட்டன்சத்திரம், பழனி, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டுவரப்படுகின்றன.
காய்கறிகளின் வரத்து அதிகம்
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 300க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் கொண்டுவரப்படுகின்றன. தேவைக்கு அதிகமாக காய்கறிகள் கொண்டுவரப்படுவதால் விலை குறைந்துள்ளது. கேரட், பீன்ஸ், அவரைக்காய், உருளைக்கிழங்கு, நூக்கல் உள்ளிட்ட காய்கறிகளின் விலை சரிவடைந்துள்ளது.
காய்கறிகள் விலை
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம் (ஒரு கிலோ) : பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை, உருளைக்கிழங்கு ரூ.18, கேரட் ரூ.25, பீன்ஸ் ரூ.15 முதல் ரூ.20 வரை, நூக்கல் ரூ.25 வரை, சவ்சவ் ரூ.15, பீட்ரூட் ரூ.20, முட்டைக்கோஸ் ரூ.15, பச்சை மிளகாய் ரூ.20, இஞ்சி ரூ.40, சேப்பங்கிழங்கு ரூ.20, சேனைக்கிழங்கு ரூ.20, கத்தரிக்காய் ரூ.20, வெண்டைக்காய் ரூ.25, அவரைக்காய் ரூ.15, கோவைக்காய் ரூ.20, பாகற்காய் ரூ.25,
தக்காளி, முருங்கைக்காய்
முருங்கைக்காய் ரூ.80, முள்ளங்கி ரூ.10, வெள்ளரிக்காய் ரூ.10, புடலங்காய் ரூ.20, கொத்தவரைக்காய்ரூ.20, பூசணிக்காய் ரூ.15, தக்காளி ரூ.10, காலிபிளவர் ரூ.25, பீர்க்கங்காய் ரூ.20, பச்சை மொச்சை ரூ.30, சுரைக்காய் ரூ.20, சாம்பார் வெங்காயம் ரூ.20 முதல் ரூ.25 வரை, பச்சை பட்டாணிரூ.50, கீரை (கட்டு) ரூ.10, தேங்காய் (ஒன்று) ரூ.15 முதல் ரூ.22 வரை, வாழைக்காய் (ஒன்று) ரூ.3 முதல் ரூ.6 வரை, வாழைப்பூ (ஒன்று) ரூ.10, வாழைத்தண்டு (பீஸ்) ரூ.10.
பழங்கள் விலை குறைவு
கடந்த 2 வாரங்களாக பழங்கள் விலை அதிகரித்து வந்தது. இந்தநிலையில், வரத்து அதிகரித்து வருவதின் எதிரொலியாக பழங்களின் விலை குறைய தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த வாரத்தில் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சாத்துக்குடி அதிரடியாக குறைந்து, தற்போது ரூ.35 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்படுகிறது.மாதுளை மற்றும் திராட்சை போன்றவற்றின் விலை ரூ.20 வரை குறைந்திருக்கிறது.
ஆப்பிள், திராட்சை (கிலோ)
வாஷிங்டன் ஆப்பிள் ரூ.170, சீனா ஆப்பிள் ரூ.150 முதல் ரூ.160 வரை, இந்திய ஆப்பிள் ரூ.120, மாதுளை (காபூல்) ரூ.110 முதல் ரூ.120 வரை, சாதாரண மாதுளை ரூ.80 வரை, சாத்துக்குடி ரூ.35 முதல் ரூ.45 வரை, ஆரஞ்சு ரூ.35, கொய்யாப்பழம் ரூ.30, திராட்சை (கருப்பு) ரூ.50, கருப்பு சீட்லெஸ் திராட்சை ரூ.80 முதல் ரூ.100 வரை, பச்சை சீட்லெஸ் திராட்சை (சோலாப்பூர்) ரூ.60 முதல் ரூ.70 வரை, தர்பீஸ் ரூ.15 முதல் ரூ.20 வரை, பப்பாளி ரூ.20, கிர்ணிப்பழம் ரூ.20, சப்போட்டா ரூ.25 முதல் ரூ.30 வரை, அன்னாசிபழம் ரூ.25 முதல் ரூ.30 வரை, இலந்தைப்பழம் ரூ.15, வாழை (தார்) ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பெருமழையால் விளைந்த காய்கறிகள்
விவசாயத்துக்கு பக்குவமான மழை பெய்ததன் காரணமாக விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் தேவைக்கு அதிகமான காய்கறிகள் வந்து குவிந்துள்ளதால் விலை குறைந்துள்ளது. கனமழைக்கு பின்னர் சென்னையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். மக்களிடம் பண புழக்கம் குறைவாக இருப்பதால் வாங்கும் திறனும் குறைந்துவிட்டது. ஆகையால் விலை சரிவடைந்துள்ளதாகவும், பட்ஜெட் அறிவிப்பு வெளியாகும் வரை இதே விலை நீடிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.