டெல்லி: இந்தியாவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான டிசிஎஸ் உலகின் சக்தி வாய்ந்த ஐ.டி. பிராண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பிராண்ட் பைனான்ஸ் என்ற நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்களை மதிப்பீடு செய்து, அவற்றில் உலகின் சக்தி வாய்ந்த மற்றும் மதிப்புமிக்க நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுகிறது.
பிராண்ட் பைனான்ஸ் வெளியிட்டுள்ள 2016-ம் ஆண்டுக்கான தரப்பட்டியலில் ஐ.டி. துறையில் உலகின் சக்தி வாய்ந்த பிராண்டாக டி.சி.எஸ். நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது. டிசிஎஸ் நிறுவனம் 78.3புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
டிசிஎஸ் நம்பர் 1 பிராண்ட்
வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் விதம் மற்றும் பணியாளர்களின் மனநிறைவு ஆகிய விஷயங்களில் டிசிஎஸ் நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என்று பிராண்ட் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.
பல லட்சம் ஊழியர்கள்
கடந்த 6 ஆண்டுகளாகவே டிசிஎஸ் நிறுவனத்தின் பிராண்ட் பிரம்மாண்ட வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உள்ள 3, 44000 ஊழியர்களே பிராண்ட் அம்பாசிடர்களாக செயல்பட்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளனர் என்று டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ கூறியுள்ளார்.
டிஸ்னி
ஒட்டுமொத்தமாக 2016-ம் ஆண்டின் சக்தி வாய்ந்த பிராண்டாக டிஸ்னி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதிப்புமிக்க பிராண்டாக ஆப்பிள் தேர்வாகியுள்ளது.
சந்தைமதிப்புள்ள நிறுவனம்
உலகின் அதிக சந்தை மதிப்புள்ள நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் முதலிடத்தைப் பிடித்துள்ளது. நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 490 கோடி டாலராக உயர்ந்தது. இந்த அறிவிப்பு வந்தவுடன் நிறுவனப்பங்குகள் 9 சதவீதம் வரை உயர்ந்தன. இதனால் ஆல்பபெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 56,800 கோடி டாலராகவும், ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 53,500 கோடி டாலராகவும் உள்ளது.
ஆல்பபெட் நிறுவனம்
கூகுள் நிறுவனம் 2004ம் ஆண்டு பட்டியலிடப்பட்டது. எஸ்அண்ட்பி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் 12-வது நிறுவனம் ஆல்பபெட் ஆகும். கடந்த காலங்களில் ஜெனரல் எலெக்ட்ரிக், ஜெனரல் மோட்டார்ஸ், ஐபிஎம், எக்ஸான் மொபில் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் சந்தை மதிப்பு அடிப்படையில் முதலிடத்தில் இருந்தன.
விளம்பர வருமானம்
கூகுள் நிறுவனத்தின் விளம்பர வருமானம் சர்வதேச அளவில் தொடர்ந்து உயர்ந்து வருவதாக ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கூறியுள்ளார்.கடந்த 2010ம் ஆண்டு ஒரு முறை கூகுள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பை தாண்டியது. அப்போது இரு நிறுவனங்களும் 20,000 கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனங்களாக இருந்தன.
ஸ்டீவ் ஜாப்ஸ்
2010ல் ஸ்டீவ் ஜாப்ஸ் உயிருடன் இருந்தார். தவிர அப்போது ஐபேட் வெளியிட ஆப்பிள் தயாராக இருந்தது. இப்போது ஆப்பிள் நிறுவனத்தின் வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஐபோன்கள் மூலமாக வருகிறது. இது மிகப்பெரிய பிரச்சினை என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.