டெல்லி: நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக உருவெடுக்கத் தயாராகும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் ஸ்டேடியங்களில் இலவச இண்டர்நெட் சேவை அளிக்கத் திட்டமிட்டுள்ளது.
நாளை நாக்பூரில் துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மூலம் மிகப்பெரிய அளவிலான வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் என எண்ணத்துடன் ரிலையன்ஸ் ஜியோ செயல்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ
டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடக்கும் 6 முக்கிய ஸ்டேடியங்களுக்கு வரும் மக்களுக்கு அன்-லிமிடெட் இண்டர்நெட் சேவையை வழங்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது என டெல்லி பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தில் இலவச வை-பை இண்டர்நெட் சேவையைத் துவங்கி வைக்க வந்த இந்நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
6 ஸ்டேடியங்கள்
இதன்படி கொல்கத்தா ஈடென் கார்டன், மும்பை வான்கடே, மொஹாலி ஐஎஸ் பின்திரா, தர்மசாலா எச்பிசிஏ, பெங்களூரு சின்னசுவாமி ஸ்டேடியம் மற்றும் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது இலவச வை-பை இண்டர்நெட் சேவையை அளிக்க உள்ளது.
ஜியோ நெட்
2015ஆம் ஆண்டில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையே நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை வான்கடே விளையாட்டு அரங்கில் ஜியோ நெட் சேவை முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.
20,000 பேர்
15-35 MBPS வேகத்தில் இயக்கப்படும் இந்த ஜியோ நெட் சேவையில் குறைந்தது 20,000 பேர் தொடர் இணைப்பிலும், அதிகபட்சமாக 40,000 பேர் வரையில் இண்டர்நெட் சேவை பெற முடியும் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா
தற்போது புதிதாக டெல்லி பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தில் துவங்கப்பட்டுள்ள ஜியோ நெட் சேவையில் 650 இயக்கு முனைகள் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் மார்ச் 23ஆம் தேதி நடக்கும் போட்டியின் போது சுமார் 40,000 பேர் இலவச இண்டர்நெட் சேவையைப் பயன்படுத்த முடியும்.