டெல்லி: மத்திய அரசு அளிக்கும் மானியங்களைப் பொது மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தும் திட்டத்திற்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் வேண்டும் என்ற கோரிகையுடன் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆதார் எண் குறித்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளையும் தாண்டி மக்கள் மற்றும் அரசு செலவுகளை அதிகளவில் குறைக்கும் இத்திட்டத்திற்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால் இனி அரசின் அனைத்துச் சேவைகள் மற்றும் மானியங்களைப் பெற ஆதார் எண்ணைக் கட்டாயமாக்க பட உள்ளது.
ரூ.15,000 கோடி சேமிப்பு
ஆதார் மூலம், பல்வேறு திட்டங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கான ரூபாயைச் சேமிக்க முடியும். இதுவரையிலும் ரூ.15,000 கோடி வரை மிச்சப்பட்டுள்ளது.
தகவல் திருட்டு
ஆதார் எண்ணுக்காகப் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள், தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாகப் பல்வேறு உறுப்பினர்களும் கவலை தெரிவித்தனர். அதை மத்திய அரசு தனது கவனத்தில் கொண்டுள்ளது.
தனிநபர் குறித்த தகவல்களை அரசு யாருடனும் பகிர்ந்து கொள்ளாது. அனுமதியின்றி அதுபோன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்பவர்கள் தண்டிக்கப்படுவர் என்றார் ஜேட்லி.
பண மசோதா
மேலும் ஆதார் மசோதா பண மசோதாவாகக் கொண்டு வந்தது குறித்து எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினர். இதற்கு நிதியமைச்சர் கூறுகையில் ஆதார் மசோதா பண மசோதாவாகக் கொண்டு வரப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை.
இந்திய அரசின் நிதித் தொகுப்பில் இருந்து விநியோகிக்கப்படும் நிதி தொடர்பான எந்த மசோதாவுக்கும், பண மசோதாவுக்கான தகுதியுள்ளது என விளக்கம் அளித்தார்
ஒப்புதல்
பண மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட்ட ஆதார் மசோதா நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு மசோதா சட்டமாக வேண்டுமெனில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலையும் பெற வேண்டும்.
பண மசோதா என்றால்..?
ஆனால், பண மசோதாவாக அறிமுகம் செய்யப்படும் மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்தாலே பேதுமானதாகும். அதன்பிறகு, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, மசோதா மீது விவாதம் நடத்தப்படும். அதுவும் 14 நாள்களுக்குள் மசோதா மீது விவாதம் நடத்தி முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில், மாநிலங்களவையின் ஒப்புதலின்றியே, மசோதா தானாகவே நிறைவேறிவிடும்.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விவாதத்துக்காக வெள்ளிக்கிழமை கொண்டு வந்தார்.
காங்கிரஸ்
மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசால், ஆதார் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆதாரை கட்டாயமாக்குவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.