பெங்களூரு: ஒரு காலத்தில் காவி உடை அணிந்தவர்களை நாம் யோகிகள், துறவிகள் என அழைப்பது வழக்கம், ஆனால் இன்று காவி உடை அணிந்தவர்களை வர்த்தக உலகம் மிகப்பெரிய வியாபாரிகளாகவே பார்க்கிறது. குறிப்பாகப் பாபா ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் போன்றவர்கள் ஐஐஎம் கல்லூரி மாணவர்களை விடவும் அசத்தலாக வியாபார யுத்திகளை வகுக்கின்றனர்.
இந்தியாவில் பெட்ரோல், தங்கம்/வெள்ளி வர்த்தகச் சந்தைக்குப் பின் மிகப்பெரிய சந்தையாகப் பார்க்கப்படுவது எப்எம்சிஜி (FMCG) சந்தை தான்.
ஏற்கனவே இத்துறையில் பழம் தின்று கொட்டைப் போட்ட பல நிறுவனங்கள் இருக்கும் போது சூறாவளி போல் அடித்துத் துவைக்கிறது பாபா ராம்தேவ்-வின் பதஞ்சலி நிறுவனம். இந்நிலையில் பாபா ராம்தேவுடன் போட்டிப் போட ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்-ம் ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத என்ற நிறுவனத்தின் மூலம் களத்தில் குதித்துள்ளார். (சபாஷ் சரியான போட்டி)
பாபா ராம்தேவ்
யோகா குரு என அழைக்கப்படும் பாபா ராம்தேவ் மேற்கு இந்திய பகுதிகளில் மிகப்பெரிய செல்வாக்கு படைத்தவர். இந்தச் செல்வாக்கை பயன்படுத்திச் சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவும் அளித்த நிலையில், அக்கட்சிகள் ஆட்சியையும் பிடித்தது.
இந்த ஜாக்பாட் வாய்ப்பைப் பயன்படுத்தித் தனது நீண்ட நாள் கனவான எப்எம்சிஜி வியாபாரத்தை 2006ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் துவங்கினார்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்
2015ஆம் ஆண்டில் பாப ராம்தேவ் தனது பதஞ்சலி நிறுவனத்தின் பெயரில் முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டியாக மாவு வகைகள், நெய், பிஸ்கேட், நூடில்ஸ், தேன், டூத்பேஸ்ட் எனத் தொடர்ந்து அறிமுகம் செய்து வந்தார்.
இதனைக் கண்ட ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர், 2003ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேதம் என்ற நிறுவனத்தின் மூலம் தற்போது எப்எம்சிஜி துறையில் அதிகம் விற்பனை செய்யப்படும் மசாலா பொருட்கள் முதல் பேஸ் கிரீம் வரை அனைத்தையும் விற்பனை செய்யப் பல வழிகள் திட்டம் தீட்டியுள்ளார்.
சர்ச்சை
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் வாழும் கலை அமைப்பின் சார்பாக உலகக் கலாச்சார விழா என்ற பெயரில் மூன்று நாட்கள் நிகழ்ச்சியை யமுனா நதிக்கரையில் நடத்தனார்.
இந்த நிகழ்ச்சியில் 35 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கான பணிகளுக்காகப் பல ஆயிரம் ராணுவ அதிகாரிகள் உட்படுத்தப்பட்டது உலகக் கலாச்சார விழாவின் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது நாம் மறக்க முடியாது.
கிஷோர் பியானி உடன் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்
வர்த்தகத்திற்காகப் பாபா ராம்தேவ் உடன் வேண்டா வெறுப்பாக இணைந்த ப்யூச்சர் குரூப் தலைவர் கிஷோர் பியானி, ஆர்வமுடன் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத நிறுவனத்துடன் இணைந்துள்ளார்.
2006ஆம் ஆண்டில் பதஞ்சலி
சில முக்கிய அரசியல் கட்சிகளின் துணையோடு எவ்விதமான தடையுமின்றி எப்எம்சிஜி மற்றும் ஹெல்த்கேர் பிரிவின் கீழ் 2006ஆம் ஆண்டுத் தனது பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தைத் துவங்கினார்.
துவங்கிய 4 வருடத்திலேயே (2010ஆம் ஆண்டு) யாரும் எதிர்பார்க்காத வகையில் 162 கோடி ரூபாய் அளவில் இந்நிறுவனம் விற்பனை செய்து அசத்தியது
2,000 கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியம்
இதன் பின் கோதுமை மாவு முதல் பேஸ் கீரிம் வரை அனைத்தையும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவன பெயரில் அறிமுகம் செய்தார் பாபா ராம்தேவ்.
இந்நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்கப் பல கார்பரேட் நிறுவனங்களுடன் தடாலாடி இணைப்பு இதில் பியூச்சர் குரூப் நிறுவனமும் அடக்கம். இதனால் 2014ஆம் ஆண்டில் பாபா ராம்தேவ் சுமார் 2,000 கோடி ரூபாய் வர்த்தகத்தை அடைந்தார்.
பிற நிறுவனங்கள்
ஒவ்வொரு வருடமும் 30 முதல் 70 சதவீதம் வரையிலான உயர்வைச் சந்தித்த பதஞ்சலி நிறுவனத்தால் ஹிந்துஸ்தான் யுனிலீவர், காட்ரிஜ், மேரிகோ, டாபர் மற்றும் இமாமி போன்ற பல நிறுவனங்கள் வர்த்தகச் சரிவை சந்தித்துள்ளது.
பதஞ்சலி ஆயுர்வேத
பாபா ராம்தேவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் சோப் முதல் சோள சீவல் (cornflakes) வரை பல பொருட்களை தயாரித்து விற்று வருகிறது. இதன் வர்த்தகம் 2012ஆம் ஆண்டில் 450 கோடியாகவும், 2013ஆம் ஆண்டில் ரூ.850 கோடியாகவும், 2014ஆம் ஆண்டில் ரூ.1,200 கோடியாகவும் உள்ளது. 2015ஆம் ஆண்டின் முடிவில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் 2,000 கோடி ரூபாய் அளவில் உயரும் என நிறுவன கணிப்புகள் தெரிவிக்கிறது.
67 சதவீத உயர்வு
2014ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் வர்த்தகம் 2015ஆம் நிதியாண்டில் 67 சதவீதம் உயர்ந்துள்ளது.
நிறுவன பொருட்கள்
இந்நிறுவனத்தின் பெயரில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்குச் சோப்பு, ஷாம்பு, பல் பாதுகாப்புப் பொருட்கள், தைலம், தோல் கிரீம்கள், பிஸ்கட், நெய், பால், ஜூஸ், தேன், கோதுமை மாவு, கடுகு எண்ணெய், மசாலா பொருட்கள், சர்க்கரை மற்றும் பல பொருட்களைப் பிட்டி குரூப் (Pittie Group) நிறுவனம் விநியோகத்திலும், விற்பனையிலும் ஈட்டுப்பட்டுள்ளது.
4,000 கடைகள்
2007ஆம் ஆண்டுத் துவங்கிய இந்நிறுவனம் 150 முதல் 200 கடைகளைக் கொண்டு தனது வர்த்தகத்தை வரிவாக்கம் செய்து தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 4000 கடைகளுக்கு மேல் உள்ளது.
பதஞ்சலி நிறுவன நிர்வாகம்
2,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக நிறுவனமாக திகழும் பதஞ்சலி நிறுவன நிறுவனத்தின் 93 சதவீத பங்குகள் ஆச்சாரியா பாலகிருஷ்னா உடனும், மீதமுள்ள 7 சதவீத பங்குகள் சர்வான் மற்றும் சுனிதா போடார் என்ற என்ஆர்ஐ தம்பதிகளிடம் உள்ளது.
ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேதம்
இந்நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகள் ரவிஷங்கரின் வாழும் கலை அமைப்பிடம் உள்ளது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் புதிய இணைப்புகள்
2017ஆம் ஆண்டுக்குள் தனது ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேதம் நிறுவனத்தின் 600 கடைகள் எண்ணிக்கையை 2500 ஆக உயர்த்த வேண்டும் எனப் பல்வேறு வர்த்தக நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளார் ரவிஷங்கர். இதில் ப்யூச்சர் குரூப் நிறுவனத்தின் பிக் பஜார் நிறுவனமும் ஒன்று.
டிஜிட்டல் துணையோடு ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்..
ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேதம் நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்க ரவிஷங்கர் அண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் ஆப் எனப் பல செயலிகளை உருவாக்கியுள்ளார்.
ஈகாமர்ஸ்
அதுமட்டும் அல்லாமல் பாபா ராம்தேவ் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் ஆகிய இருவரும் இணைய மூலம் தங்களது விற்பனையை அதிகரிக்கும் வகையில் ஈகாமர்ஸ் தளத்தையும் உருவாக்கியுள்ளனர்.
இதில் பொருட்களை வாங்கும் அனைவருக்கும் இலவசமாக ஷிப்பிங் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வியப்பு
நாட்டின் மிகப்பெரிய எப்எம்ஜிசி நிறுவனங்களான ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி போன்றவை புதிய பொருட்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது 6 மாதம் முதல் 1 வருடம் தேவைப்படும். அதிலும் முக்கியமான நகரங்களில் மட்டுமே முதல் அறிமுகம் செய்யப்பட்டுப் பின் நாட்டின் பிற பகுதிகளுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.
ஆனால் பாபா ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் போன்ற வியாபார சாமியார்கள் 6 மாதத்தில் 10 பொருட்களை அசால்டாக அறிமுகம் செய்து விற்பனையில் கலக்கி வருகின்றனர்.
போட்டி
எது எப்படியோ இனி எப்எம்ஜிசி துறையில் இரு சாமியார்களின் வியாபாரம் கலைக்கட்டும் கல்லாகட்டும்.