பெங்களூரு: பீனிக்ஸ் பறவையாய் பறந்த கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனம் 9,000 கோடி ரூபாய் கடன் நெருக்கடியால் தரையைத் தட்டியது. தற்போது இக்கடனை முறைப்படி வங்கிகளுக்குச் செலுத்த வேண்டி மல்லையா நாட்டை விட்டு ஓடியுள்ளார்.
விஜய் மல்லையா தனது 29 வயதில் இருந்து வர்த்தக உலகில் முக்கியத் தொழிலதிபராகத் திகழ்ந்து வருகிறார். இவர் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனம் மட்டும் அல்லாமல் யுபி குரூப் என்ற மிகப்பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டியாண்டு வருகிறார்.
ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் உயர்விலும் வீழ்ச்சியிலும் நாம் பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். அந்த வகையில் விஜய் மல்லையாவிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியதில் சில முக்கியமான விஷயங்கள் உள்ளது.
கிங்பிஷர் துவக்கம்..
விஜய் மல்லையா கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தைத் துவங்கும் போதும் யுபி குரூப் நிறுவனத்தின் கீழ் பல வர்த்தக நிறுவனங்களை நடத்தி வந்தார். ஆனால் எவ்வித முன் அனுபவமும் இல்லாமல் மிகப்பெரிய முதலீட்டில் மல்லையா தனது கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தைத் துவங்கினார்.
முதலீட்டாளர்களும், வங்கிகளும் கண்களை மூடிக்கொண்டு இந்நிறுவனத்தின் மீது முதலீடும், கடனையும் அளித்தது.
பாடம் 1
சாமானியர்களும் வண்ணமயமான முதலீட்டுத் திட்டங்கள், குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் சந்தையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பொருட்களின் மீது முதலீடு செய்யக்கூடாது. இவற்றிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும்.
பாடம் 2
நாம் இரவு பகலாக உழைத்துச் சம்பாதித்த பணத்தை முன் அனுபவம் அற்ற ஆபத்து நிறைந்த முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யக்கூடாது. நிலையான மற்றும் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களான பிபிஎப், வங்கி வைப்பு நிதி, அரசு பத்திரங்கள், தபால் நிலைய திட்டங்கள் என முதலீடு செய்யவும்.
ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டு மல்லையா போல் சிக்கலில் சிக்கிக்கொள்ளாதீர்.
அதீத தன்னம்பிக்கை..
விஜய் மல்லையா தான பிற துறைகளில் சிறப்பாக இயங்குவதை வைத்துக்கொண்டு அதீத தன்னம்பிக்கையால் எவ்விதமான அனுபவம் மற்றும் திட்டம் இல்லாமல் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தைத் துவங்கினார்.
பாடம் 3
சாமானியர்கள் தங்களுக்குப் பிற முதலீட்டு யோசனைகள் மூலம் மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான லாபமும், வருவாயும் கிடைக்கப்பெற்ற நிலையில், அனைத்துத் திட்டங்களிலும் கண்களை மூடிக்கொண்டு முதலீடு செய்யக்கூடாது.
பாடம் 4
புதிய திட்டம் அல்லது சந்தையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பொருட்களின் மீது முதலீடு செய்யும் முன் அதன் செயல்திறன், நமக்கு லாபம் அளிக்கக் கூடியதா. இந்த முதலீட்டின் மூலம் நாம் நஷ்டம் அடைந்தால் நாம் குடும்பத்தின் நிதி நிலை பாதிக்கப்படுமா என்ற வகையில் யோசித்துச் செயல்பட வேண்டும்.
கடனில் வாழ வேண்டாம்
கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனம் சந்தையிலும், வர்த்தக ரீதியிலும் சரியாக இயங்காத பட்சத்திலும் மல்லையா தொடர்ந்து வங்கிகளில் கடனை பெற்று நிறுவனத்தை நடத்தியும் அதிகளவிலான செலவுகளையும் செய்து வந்தார்.
இதனால் இவரின் வங்கி கடன் தொகை மட்டும் 9,000 கோடி ரூபாய் அளவு உயர்ந்தது. அதுமட்டும் அல்லாமல் நிறுவனத்தின் மூலம் 4,301 கோடி ரூபாய் நஷ்டத்தையும் சந்தித்தார்.
பாடம் 5
முதலீட்டாளர்களும் சரி, சராசரி மக்களும் சரி அதிகளவிலான கடனை பெறுவதை முழுமையாகக் குறைக்க வேண்டும்.
ஒருவரின் ஈஎம்ஐ மற்றும் கிரேடிட் கார்டு பில்கள் மாத வருமானத்தில் 50 சதவீதத்தை எட்டுகிறது என்றால் அவர் மிகப்பெரிய சிக்கலை சந்திக்க உள்ளார் என்பது உறுதி.
உங்க கிரேடிட் கார்டு மற்றும் ஈஎம்ஐ பில் எவ்வளவு..? கணக்கிட்டுப் பாருங்கள்..!
தொடர் ஆய்வுகள்
மல்லையா தனது கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தைத் தொடர் ஆய்வுகள் மேற்கொள்வதைத் தவறியுள்ளார். இதுவே இந்நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
பாடம் 6
நம்முடைய முதலீடும் சரி, வர்த்தகமும் சரி குறித்த நேரத்தில் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் வர்த்தக ரீதியாகவும், வருவாய் ரீதியாகவும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.