கொல்கத்தா: நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், தனது சேவையை விரிவாக்கும் விதத்தில் ஏர்செல் நிறுவனத்தின் 4ஜி அலைக்கற்றைகளை வாங்கத் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் படி ஏர்டெல் எட்டு வட்டங்களில் உள்ள ஏர்செல் நிறுவனத்திற்குச் சொந்தமான 4ஜி அலைவரிசையை வாங்க பார்தி ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது, இதற்கு ஏர்செல் நிறுவனமும் நிர்வாகமட்டம் வரை ஒப்புதல் அளித்துள்ளது. இன்றைய மதிப்பீட்டில் இதன் மொத்த மதிப்பு 3,500 கோடி ரூபாய்.
இந்த 4ஜி அலைக்கற்றையைக் கைப்பற்றுவதற்கான ஒப்பந்தத்தில் ஏர்டெல் மற்றும் ஏர்செல் நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பேன் இந்தியா
ஏர்டெல் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தின் 4ஜி அலைவரிசையை வாங்கும் பட்சத்தில் இந்தியா முழுக்க 4ஜி அலைவரிசையை வைத்திருக்கும் நிறுவனமாக ஏர்டெல் உருவெடுக்கும்.
4ஜி சேவை
ஏற்கனவே ஏர்டெல் இந்திய முழுக்கத் தனது சேவையை அளித்து வந்தாலும் 4ஜி மற்றும் இதர முக்கியச் சேவைகளின் தென் இந்திய பகுதியில் ஏர்செல் ஆதிக்கம் அதிகம். இந்நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் 4ஜி அலைக்கற்றை வாங்கிய பின் ஏர்டெல் நிறுவனம் குமரி முனை முதல் கஷ்மீர் எல்லை வரை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் 4ஜி சேவையை வழங்க உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
இந்தக் கைப்பற்றுதல் அனைத்தும் ரிலையன்ஸ் ஜியோ-வின் அறிமுகத்திற்கு எதிராகவும், சந்தையில் நிலைத்திருக்கவே ஏர்டெல் இத்தகைய பெரும் தொகையைக் கொடுத்து 4ஜி அலைக்கற்றை வாங்குகிறது.
8 வட்டங்கள்
தமிழ்நாடு (சென்னையும் சேர்த்து), பிஹார், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஆந்திரப் பிரதேசம், ஒடிஷா மற்றும் வட கிழக்கு ஆகிய மாநிலங்களுக்கான அலைவரிசைக்கு ஒப்பந் தம் போடப்பட்டுள்ளது. ஏர்செல் நிறுவனத்தின் இந்த அலைவரிசை 2030-ம் ஆண்டுச் செப்டம்பர் வரை செல்லுபடியாகும்.
வீடியோகான்
பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த மாதம் வீடியோகான் நிறுவனத்தின் 6 வட்டாரங்களுக்கான 4ஜி அலைவரிசையை 4,428 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.