டெல்லி: இந்திய சந்தையில் வரலாறு காணாத வகையில் அன்னிய முதலீட்டு அளவு 51 பில்லியன் டாலரை எட்டியுள்ளது எனத் தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளர் ரமேஷ் அபிஷேக் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் - பிப்ரவரி காலகட்டங்களில் மத்திய அரசு மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகள், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மற்றும் நாட்டில் புதிய வர்த்தகம் துவங்குவதற்கான எளிமையாக்கப்பட்ட சட்டத்திட்டங்கள் ஆகியவை இந்தியாவில் அன்னிய முதலீட்டு அளவை புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
கடந்த 2012ஆம் நிதியாண்டில் நாட்டின் அன்னிய முதலீட்டு அளவு 34.8 பில்லியன் டாலரில் இருந்து 46.55 பில்லியன் டாலர் என்ற நிலையில் சுமார் 34 சதவீத உயர்வில் அன்னிய முதலீட்டுக் குவிந்தது. இதன் பின் 2016ஆம் ஆண்டில் முதலீட்டு அளவு 51 பில்லியன் டாலராக உயர்ந்து உச்சத்தை அடைந்துள்ளது.
ஏப்ரல் - பிப்ரவரி காலகட்டங்களில் இந்திய பங்குச்சந்தையில் மட்டும் சுமார் 29.4 பில்லியன் டாலர் வரையிலான அன்னிய முதலீடு குவிந்தது. இதில் 10.98 பில்லியன் டாலர் சிங்கப்பூரில் இருந்து முதலீடு செய்யப்பட்டவை.
கடந்த 21 மாதத்தில் இந்திய பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டு அளவு 44 சதவீத உயர்வைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.