டெல்லி: ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி எனப்படும் ஈபிஎப் கணக்கிற்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு 8.75 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாகக் குறைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் இதன் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசு 0.05 சதவீதம் குறைத்து நிதியமைச்சகத்தின் ஒப்புதல்களுடன் அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் வர்த்தக அமைப்புகள் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக ஊழியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
குறைவான வட்டி விகிதம்
கடந்த நிதியாண்டில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கின் வைப்பு தொகைக்கு மத்திய அரசு 8.75 சதவீதம் வட்டி விகிதத்தை அளித்தது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் இதன் அளவு 8.8 சதவீதமாக உயரும் எனத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தத்தாத்ரேயா சில வாரங்களுக்கு முன் தெரிவித்தார்.
8.70 சதவீத வட்டி
ஆனால் மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 2015-16ஆம் ஆண்டுக்கான பிஎப் வைப்பு மீதான வட்டி விகிதம் வெறும் 8.70 சதவீதம் மட்டுமே அளிக்க நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சகம் மறுப்பு..
தொழிலாளர் நலத்துறை பரிந்துறைத்த 8.8 சதவீத வட்டிக்கு நிதியமைச்சகம் மறுப்புத் தெரிவித்தது மட்டும் அல்லாமல் பிஎப் கணக்கு மீதான வட்டி விகிதம் பிபிஎப் கணக்குடன் நிலைப்பெற வேண்டும் எனவும் கூறியுள்ளது.
பிபிஎப் திட்டம்
2015-16ஆம் நிதியாண்டில், கடந்த ஆண்டில் இருந்தை போலவே பிபிஎப் திட்டத்தின் மீதான வட்டி விகிதம் 8.7 சதவீதம் என நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
அதிக முதலீடு
தற்போது பிபிஎப் மற்றும் பிஎப் கணக்குகளுக்கு ஒரே வட்டி விகிதம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பிபிஎப் கணக்கில் அதிகளவிலான முதலீடு கிடைக்கும் என நிதியமைச்சகம் எதிர்பார்க்கிறது.
அநியாயம்
இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய ஊழியர்கள் அமைப்பான Bharatiya Mazdoor Sangh கூறுகையில், ஈபிஎப்ஒ அமைப்பின் நிதி முதலீடு தணிக்கை குழு நடப்பு நிதியாண்டில் 8.95 சதவீதம் அளவிலான வட்டி விகிதத்தை அளிக்கத் தயாராக உள்ள நிலையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி 8.70 சதவீதம் என அறிவித்துள்ளார்.
இதனால் மத்திய அரசு கணக்கில் குறைந்த வட்டி அளித்தன் மூலம் 91 கோடி ரூபாய் கூடுதல் இருப்பாக இருக்கும். இது ஊழியர்களுக்கு அரசு செய்யும் மிகப்பெரிய அநியாயம் என BMS அமைப்பு தெரிவித்துள்ளது.
போராட்டம்
இதனால் மத்திய அரசின் 8.7 சதவீத வட்டி விகித அறிவிப்பை எதிர்த்து வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி ஈபிஎப்ஓ அலுவலகம் முன்னால் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.