டெல்லி: இந்தியாவில் விமான நிறுவனங்கள் பயணிகள் விமானச் சேவைக்கு நிர்ணயம் செய்துள்ள அதிகப்படியான கட்டணங்கள், இத்துறையின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது.
இதனைக் குறைக்கும் வகையில் 1 மணிநேரத்திற்குக் குறைவான விமானப் பயணத்திற்கு 2,500 ரூபாய் என்ற நிலையான கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசு லோக் சபாவில் அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இதுகுறித்து விமான நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்துள்ளது.
விமானப் போக்குவரத்து
மத்திய அரசு இந்தியாவில் விமானப் போக்குவரத்தை மலிவானதாக்கும் வகையில் பல முயற்சிகளைச் செய்து வருகிறது. அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் 2ஆம் தர நகரங்களுக்கும் விமானச் சேவையை இணைக்கும் வகையில் புதிய மற்றும் சிறு, குறு விமானங்களை நிறுவி வருகிறது.
ஆனால் இத்தகைய முயற்சிகள் வெற்றியடைய விமானப் பயணக் கட்டணம் கண்டிப்பாக மலிவானதாக இருக்க வேண்டும்.
2,500 ரூபாய் கட்டணம்
இந்நிலையில், லோக் சபாவில் நடந்த முக்கியக் கூட்டத்தில் இந்தியாவில் ஒரு மணிநேரத்திற்குக் குறைவான பயண நேரம் கொண்ட விமானப் பயணத்திற்கு 2,500 ரூபாய் என்ற நிலையான கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என மத்திய அரசு சார்பில் கட்டண நிர்ணயம் செய்யும் பரிந்துரையை அளிக்கப்பட்டது.
விமான நிறுவனங்கள்
மத்திய அரசின் பரிந்துரையை ஏற்கப்பட்ட நிலையில், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.
இதனுடன் முக்கியக் காலங்களில் (விடுமுறை, பண்டிகை காலங்கள்) தேவையில்லாமல் கட்டணத்தை உயர்த்தும் பழக்கத்தைக் கைவிட வேண்டும் எனவும் விமான நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்த உள்ளதாகத் தெரிகிறது.
சுற்றுலா
இந்திய சுற்றுலா துறைக்கு நிதி தேவை மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்தும், இதில் விமானப் போக்குவரத்துறையின் பங்கீடு குறித்து விவாதம் நடந்த போது விமான நிறுவனங்களின் அதிகப்படியான கட்டணங்கள் குறித்த விவாதம் செய்யப்பட்டது.
இயற்கை சீற்றம்
இதேபோல் அமைச்சர்கள் சிலர் சென்னை வெள்ளம், ஸ்ரீநகர் வெள்ளம் மற்றும் நேப்பாளில் ஏற்பட்ட நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றம் ஏற்பட்ட காலங்களிலும் விமான நிறுனவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை வசூல் செய்ததைச் சுட்டிக்காட்டினர்.
அசோக் கஜபதிராஜூ
விமான நிறுவனங்களின் கட்டணங்கள் குறித்து விவாதம் வலுத்த நிலையில் விமானப் போக்குவரத்து அமைச்சரான அசோ கஜபதி ராஜு, 1 மணிநேரத்திற்குக் குறைவான விமானப் பயணத்திற்கு 2,500 ரூபாய் என்ற நிலையான கட்டணம் மற்றும் அவசரக் காலங்களில் விதிக்கப்படும் அதிகப்படியான கட்டணங்கள் குறித்து விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தெரிவித்தார்.
கட்டணங்கள் சரிவு..
2013ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2016ஆம் நிதியாண்டில் விமானக் கட்டணங்கள் சுமார் 18.10 சதவீதம் வரை குறைந்துள்ளது. இந்தத் திடீர் கட்டண சரிவிற்கு முக்கியக் காரணம் கச்சா எண்ணெய் விலை சரிவினால் விமான ஏரிபொருளின் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாகவே விலை நிலையும் குறைந்துள்ளது.
40 சதவீத செயல்பாட்டுக் கட்டணம்
விமான நிறுவனங்கள் கூறுகையில், கட்டணத்தின் மூலம் பெறும் வருமானத்தில் 40 சதவீதம் செயல்பாட்டு கட்டணத்திற்காகவே செலவிடப்படுகிறது.
இதனைத் தாண்டி, எரிபொருள் செலவு, ஊழியர்களின் சம்பளம் எனப் பல செலவுகள் உள்ளது எனக் கூறுகிறது.
முடிவு..
1 மணிநேரத்திற்குக் குறைவான விமானப் பயணத்திற்கு 2,500 ரூபாய் என்ற நிலையான கட்டணம் அமலாக்கம் செய்யப்பட்டால் இந்தியாவில் விமானப் போக்குவரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும். இதேபோல் பலரின் விமானப் பயணக் கனவு நிறைவேறும்.
பொறுத்திருந்து பார்ப்போம்.