டெல்லி: இந்தியாவில் உள்ள நகைக் கடைக்காரர்கள் மீது விதிக்கப்பட்ட 1 சதவீத கலால் வரியை எதிர்த்து நகைக் கடைக்காரர்கள் கடந்த 3 மாதத்தில் சுமார் 42 நாட்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று சிவ சேனா அமைப்புடன் இணைந்து நகைக் கடைக்காரர்கள் கலால் வரி விதிப்பைத் திரும்பப்பெற்றுக்கொள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு அருண் ஜேட்லி திட்டவட்டமாக மறுத்தார், அதுமட்டும் அல்லாலமல் விதிக்கப்பட்ட வரி அரசு செலுத்தியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கலால் வரி
வெள்ளி விற்பனையாளர்கள் அல்லாலமல் தங்கம் மற்றும் தங்க நகை வியாபாரிகள் மீது மத்திய அரசு 1 சதவீத கலால் வரி விதித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் நாட்டில் நடக்கும் தங்க நகை வர்த்தகங்கள் அனைத்தையும் கணக்கில் கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகச் செய்யப்படும் வர்த்தகத்திற்குப் பான் கார்ட் அவசியமாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இவ்விரு அறிவிப்புகளை எதிர்த்தே நகைக் கடைக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அருண் ஜேட்லி
கலால் வரி விதிப்பு குறித்து நகைக் கடைக்காரர்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து மத்திய அரசு தனிக் குழுவை அமைத்து, இதில் உள்ள பிரச்சனைகள் மற்றும் ஆபத்து காரணிகளை ஆய்வு செய்து வருகிறது.
இக்குழுவின் ஆய்வறிக்கை அளித்தபின் கலால் வரி விதிப்பின் நீக்கத்தைக் குறித்து ஆலோசனை செய்யப்படும் என நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
நிதி மசோதா
நாட்டின் புதிய நிதி மசோதா குறித்து விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்தபோது, நிதியமைச்சர் அருண் ஜேட்லி நகைக் கடைக்காரர்கள் விதிக்கப்பட்ட வரி அரசுக்குச் செலுத்தியே ஆகவேண்டும். இதனால் நகைக் கடைக்காரர்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க அரசு தொடர்ந்து கண்காணிக்கும் என அவர் கூறினார்.
ஜிஎஸ்டி
நாடு முழுவதும் ஜிஎஸ்டி பாதையை நோக்கிப் பயணிக்கும் போதும், ஆடம்பர பொருட்களாக இருக்கும் தங்க நகைகள் மீது விதிக்கப்பட்ட 1 சதவீத கலால் வரிக்கு விலக்கு அளிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் அருண் ஜேட்லி.
2.5 லட்சம் கோடி
மத்திய அரசு 1100 டன் தங்கத்தை இறக்குமதி செய்யச் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்கிறது.