மும்பை: தங்கம் வாங்க மங்களகரமான தினம் என்று கூறப்படும் அட்சய திரிதியை வருகிற மே 9ஆம் தேதி வருகிறது. இந்தப் புனித நாளில் நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் தபால் நிலையம், வங்கிகள், நகைக் கடைகள் பல வழிகளில் தங்கம் வாங்க முற்படுவார்கள்.
கடந்த வருடம் அட்சய திரிதியை நாள் அன்று தங்கத்தின் வர்த்தகம் மிகவும் சிறப்பாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் தங்கம் மீதான முதலீடுகள் மிகப்பெரிய அளவிலான மாற்றத்தைக் கண்டுள்ளதால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் அதிகப்படியான மாற்றங்களை நாம் பார்த்தோம்.
ஆனால் கச்சா எண்ணெய் விலை சரிவினால் கடந்த 6 மாத காலத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலை சீராக உயர்ந்து வருகிறது. இதனால் தற்போது 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 3,045 ரூபாயாகப் பொதுச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
திங்கட்கிழமை அட்சய திரிதியை நாள் அன்று தங்கம் வர்த்தகம் கடந்த வருடத்தைப் போல் அல்லாமல் மிதமானதாகவே இருக்கும் என ரத்தினம் மற்றும் தங்க நகை வர்த்தக அமைப்பின் தலைவர் ஸ்ரீதர் ஜி.வி தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை அதிகரித்துள்ளதால் அட்சய திரிதியை நாளன்று மக்கள் பெரிய அளவிலான நகைகளை விரும்ப மாட்டார்கள் எனத் திட்டவட்டமாகத் தெரிகிறது. இதனால் சிறிய அளவிலான பொருட்கள் அதிகளவில் விற்பனையாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பிப்ரவரி முதல் வாரத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் 26,930 ரூபாய் என்ற விலையில் விற்கப்பட்ட நிலையில், தற்போது 30,450 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த வருடத்தின் அட்சய திரிதியை தினத்தின் போது தங்க நாணயங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.