மொபைல் தயாரிப்பிலும் விற்பனையிலும் உலகச் சந்தையைக் கலக்கிய நோக்கியா நிறுவனம் தற்போது இதன் மொத்த வர்த்தகத்தையும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்த நிலையில், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கான வன்பொருள் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் செயல்பட்டு வருகிறது.
பின்லாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நோக்கியா நிறுவனம் செலவுகளைக் குறைக்கப் பின்லாந்து கிளைகளில் இருந்து 1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
2018ஆம் ஆண்டுக்குள் இந்தப் பணிநீக்க பணிகளை முழுமையாக முடிக்க உள்ளதாக நோக்கியா தெரிவித்துள்ளது எனச் சிங்குவா பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் இந்நிறுவனத்தின் சர்வதேச கிளைகளில் சுமார் 1,04,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 7,000 ஊழியர்கள் பின்லாந்து அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இதன் மூலம் வருடத்திற்கு 1 பில்லியன் டாலர் வரையிலான தொகையைச் சேமிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது நோக்கியா.