மும்பை: அமெரிக்க ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் உடன் போட்டி போடும் வகையில் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் விதமாகப் பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் நிறுவனங்கள் வர்த்தகத்தை மேம்படுத்தவும், நிறுவனத்தில் புதிய பரிமாற்றத்திற்குக் கொண்டு வர அமெரிக்கச் சிலிகான் வேலியில் உள்ள கூகிள், மைக்ரோசாப்ட், யாஹூ போன்ற முன்னணி நிறுவங்களில் பணிபுரியும் உயர் அதிகாரிகளை மிகப்பெரிய சம்பளத்துடன் பணியில் அமர்த்தியது.
ஆனால் இந்தியாவில் ஸ்டார்ட்-அப் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனங்களின் நிலையற்ற தன்மையை உணர்ந்த சிலிகான் வேலி அதிகாரிகள் தற்போது தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் சிபிஓ (Chief Product Officer) ஆனந்த் சந்திரசேகரன் தற்போது இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
ஆனந்த சந்திரசேகரன்
யாஹூ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களில் முக்கியப் பொறுப்பில் இருந்த ஆனந்த் சந்திரசேகரன் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்னாப்டீல் நிறுவனத்தில் இணைந்து ஒரு வருடமே ஆன நிலையில், தான் புதிய நிறுவனத்தைத் துவங்குவதில் ஆர்வமாக உள்ளதாகக் காரணம் கூறிவிட்டு வெளியேறுகிறார்.
ரோஹித் பன்சால்
இதுகுறித்து ஸ்னாப்டீல் நிறுவனத்தின் துணை நிறுவனரான ரோஹித் பன்சால் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில்,"உங்களது சேவைக்கு நன்றி. 3 வருடத்தில் செய்திருக்க வேண்டிய பணியை வெறும் 1 வருடத்தில் வெற்றிகரமான நாம் முடித்துள்ளோம். இதேப்போன்று என்றும் இருக்க வாழ்த்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
ஜூன் 2015
ஏர்டெல் நிறுவனத்தின் சிபிஓ (Chief Product Officer) ஆக இருந்த ஆனந்த் சந்திரசேகரன் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் ஜூன் 2015ஆம் ஆண்டு இணைந்தார். இதற்கு முன் அவர் யாஹூ மற்றும் ஓபன்வேர் நிறுவனத்தில் பல உயர் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
புனித் சோனி
அதேபோன்று பிளிப்கார்ட் நிறுவனம் தனது வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யவும், அதன் தொழில்நுட்ப திறனை மேம்படுத்திக்கொள்ளவும் திட்டமிட்டு கூகுள் நிறுவன ஊழியரான புனித் சோனி-யை மிகப்பெரிய சம்பளத்தில் பணியில் அமர்த்தியது.
15 மாதங்கள் மட்டும்
தற்போது 15 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் புனித் சோனி நிறுவனத்தை விட்டு விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
பிளிப்கார்ட்
இந்தியாவில் மிகப்பெரிய சந்தை வர்த்தகத்தை அடையத் திட்டமிட்ட பிளிப்கார்ட் தனது மொபைல் ஆப் மற்றும் இணையதளத்தின் திறனை மேம்படுத்திக்கொள்ள வருடம் 1 மில்லியன் டாலர் சம்பளத்தில் பிளிப்கார்ட் இவரைப் பணியில் அமர்த்தியது.
பிங் சேவை
பிளிப்கார்ட் நிறுவனத்தின் மொபைல் ஆப்-இல் மெசேஜிங் சேவை மட்டுமே இந்த 15 மாத காலத்தில் புனித் சோனி அறிமுகப்படுத்தினார். ஆனால் சந்தையில் இது மிகப்பெரிய வெற்றி காண தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.