மும்பை: பலசரக்கு விற்பனையில் இறங்கியுள்ள பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கப் பியூச்சர் குரூப் நிறுவனத்தின் தலைவர் கிஷோர் பியானி, இனி மாதத்தில் முதல் 8 நாட்களுக்கு அனைத்து பிக் பஜார் கிளைகளிலும் அதிரடி சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
பொதுவாக மளிகைக் கடைகளில் கிடைக்கும் பொருட்களை விடப் பிக் பஜார் மற்றும் டீமார்ட் போன்ற கடைகளில் தரத்தில் உயர்வாகவும், விலை மலிவானதாகவும் இருக்கும் என்ற காரணத்திற்காகவே இக்கடைகளில் மக்கள் அதிகளவில் குவிகின்றனர்.
இந்நிலையில் தற்போது கூடுதல் சலுகை என்றால் மக்கள் கூட்டம் இனி பிக் பஜார் கடைகளில் அலைமோதும்.
பிளிப்கார்ட், அமேசான்
ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள், எலக்ட்ரானிக் முதல் காண்டம் வரை அனைத்தையும் விற்பனை செய்தது போதாது என்று, தற்போது பலசரக்கு அதாவது மளிகை பொருட்களை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது.
மளிகை கடை
மளிகை பொருட்களைத் தனது கிடங்குகளில் வைக்க முடியாத காரணத்தால், பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் மளிகைக் கடைகளை நம்பி தனது வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது.
படம்:திஇந்து
ஆன்லைன் ஷாப்பிங்
ஏற்கனவே இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களையும் ஆட்கொண்டு உள்ளது. இந்நிலையில் பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் ஆன்லைன் மளிகை பொருட்களின் விற்பனை பிக் பஜார் மற்றும் டீமார்ட் போன்ற நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.
போட்டி..
இந்தியாவில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களின் ஆதிக்கத்தை உணர்ந்த பியூச்சர் குரூப் நிறுவனத்தின் தலைவர் கிஷோர் பியானி, வாடிக்கையாளர்களை இழக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் புதிய 8 நாள் சலுகை மற்றும் தள்ளுபடி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.
அது என்னபா 8 நாள் திட்டம்..?
8 நாள் திட்டம்..
ஜூன் மாதத்தின் முதல் வாடிக்கையாளர் 2500 ரூபாய்க்குப் பொருட்களை வாங்கினால் அவர்களுக்கு 2,000 ரூபாய் மதிப்லான கேஷ் போனஸ் மற்றும் வவுச்சர்களை அளிக்கிறது பிக் பஜார். இத்திட்டம் மாதத்தின் முதல் 8 நாட்களில் மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செக்
இந்த வவுச்சர்களை அதேமாதத்தில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் மூலம், ஒரு மாதத்தில் 2 முறை வாடிக்கையாளர்களை எளிமையாக ஈர்க்க முடியும் எனப் பிக் பஜார் திட்டமிட்டுள்ளது.
கிஷோர் பியானி
இப்புதிய சலுகை திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்லை வர்த்தகத்திற்கு இடம் பெயர்வதை அதிகளவில் தடுக்க முடியும் என்பதை நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஊழியர்களுடன் ஆலோசிக்கும் போது கூறினார்.
மாதம் முழுவதும் வர்த்தகம்
இதன் மூலம் விடுமுறை அல்லது சம்பளம் வாங்கிய முதல் வாரத்தில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வழக்கம் மாற்றி மாத முழுவதும் இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும் எனக் கிஷோர் பியானி தெரிவித்துள்ளார்.
அன்லைன் வர்த்தகத்தின் தாக்கம்
மளிகை பொருட்களின் விற்பனையில் ஏற்கனவே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் ஆன்லைன் விற்பனை மூலம் அமேசான் மற்றும் பிளிகார்ட் நிறுவனங்கள் இத்துறைக்குள் நுழைகிறது.
இதனைச் சமாளிக்கவே பல வருடங்களாகத் தனது வர்த்தகத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை மாற்றாமல் வைத்திருந்த பிக் பஜார் தற்போது புதிய கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளது.
வர்த்தக இலக்கு
22,000 கோடி ரூபாயாக இருக்கும் இந்நிறுவனத்தின் வர்த்தகம் 2021ஆம் ஆண்டு 75,000 கோடி ரூபாய் முதல் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தை எட்ட வேண்டும் என்பதைக் கருத்தில் வைத்துக்கொண்டே இத்திட்டங்களை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள்
பிக் பஜார் வர்த்தகத்தை மேம்படுத்தும் விதமாக இந்நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக 6 மொபைல் ஆப்-களை வைத்துள்ளது. மேலும் இத்தொடர் வர்த்தகக் கிளைகளின் வர்த்தகத்தைக் கவனிக்கச் சுமார் 40,000க்கும் அதிகமான ஊழியர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.
50 சதவீத வர்த்தகம்
இந்தியாவில் உணவு மற்றும் பலசரக்கு பொருட்களின் வர்த்தகம் நாட்டின் மொத்த சில்லறை விற்பனையில் 50 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இதில் வெறும் 1 சதவீத்தை மட்டும் தான் ஆன்லைன் வர்த்தகம் கொண்டுள்ளது.
மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் கணிப்பின் படி 2020ஆம் ஆண்டுக்குள் இதன் அளவு 4 சதவீதத்தை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த 4 சதவீதத்தின் மொத்த மதிப்பு 19 பில்லியன் டாலர்.
ஈகாமர்ஸ் நிறுவனங்கள்
தற்போதைய நிலையில், அமேசான் நிறுவனம் பலசரக்கு விற்பனைக்காகக் கிரானா நவ் என்ற தளத்தை அறிமுகம் செய்துள்ளது, அதேபோல் பிளிப்கார்ட் நிறுவனம் தனது ஈகார்ட் நிறுவனத்துடன் இணைத்து இச்சேவையைச் செய்து வருகிறது.
பேடிஎம்
அதுமட்டும் அல்லாமல் பேடிஎம் நிறுவனம் ZIP சேவை அறிமுகம் செய்துள்ளது. ஸ்னாப்டீல் காட்ரிஜ் நேச்சர்ஸ் பேஸ்கட் நிறுவனத்துடன் இணைந்து பலசரக்கு விற்பனையை இணையம் மூலம் செய்து வருகிறது.