சென்னை: ஆசிய சந்தையின் மோசமான பங்குச் சந்தை நிலையின் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாத்துக்கொள்ளத் தங்கம் மற்றும் வெள்ளி மீது திருப்பியுள்ளனர்.
இதன் காரணமாகக் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று கிராமிற்கு 3 ரூபாய் அதிகரித்துக் காணப்படுகிறது.
தொழிற்துறை உற்பத்தி
தங்கம் விலை உயர்விற்கும் கூடுதல் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது இந்திய சந்தையின் தொழிற்துறை உற்பத்தி.
ஏப்ரல் மாத்திற்கான தொழிற்துறை உற்பத்தி -0.8 சதவீதம் அளவில் குறைந்துள்ளது, அதுமட்டும் அல்லாமல் ஆசிய சந்தையில் சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட அனைத்துச் சந்தைகளும் மிகப்பெரிய அளவிலான சரிவை சந்தித்தது.
முதலீட்டாளர்கள்
இதன் எதிரொலியாக முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாத்துக்கொள்ளத் தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்தால் தங்கம் விலை சரனுக்கு 24 ரூபாய் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 3 ரூபாய் அதிகரித்து 2,844 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது. இதேபோல் 24 கேரட் தங்த்தின் விலை 3 ரூபாய் அதிகரித்து 3039 ரூபாயில் இருந்து 3042 ரூபாய் என்ற விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
கடந்த மே மாதம் 11ஆம் தேதி 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2,842 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போல வெள்ளியின் விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 1 கிலோ பார் வெள்ளியின் விலை இன்று 65 ரூபாய் குறைந்து 41,445 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
முக்கியக் காரணம்
ஆசிய சந்தை சரிவிற்கும் தங்கம் விலை உயர்விற்கும் தொழிற்துறை உற்பத்தி காரணமாக இருந்தாலும். இது இந்திய சந்தை குறித்தது. தங்கம் பொதுவாகச் சர்வதேச சந்தையைச் சார்ந்தது.
இன்றைய உயர்விற்கு அமெரிக்கப் பெடரல் வங்கியின் நாணய கொள்கைக்கான கூட்டம் மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் நாடு வெளியேறுவதற்கான ஜூன் 23ஆம் தேதி எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் ஆகியவை தங்கம் விலையை அதிகளவில் பாதித்துள்ளது.