மும்பை: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியான நிலையில், பிரிட்டன் மண்ணில் அதிகளவில் முதலீடு செய்திருக்கும் பன்னாட்டு நிறுவன பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் டாடா குழுமம் வெள்ளிக்கிழமை 30,000 கோடி ரூபாய் சந்தை மதிப்பை இழந்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் பிரிட்டன் சந்தையில் அதிக வேலைவாய்ப்பை அளித்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களிலும் டாடா குழுமம் முதல் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதால், வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 1050 புள்ளிகள் வரை சரிந்து மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டது. இந்த வர்த்தகச் சரிவில் இந்திய சந்தையில் இருக்கும் முக்கியமான அனைத்து நிறுவனங்களும் கடுமையாகப் பாதித்தது. இதில் முக்கியமாகப் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகம் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் பாதித்தது. இதில் டாடா குழுமம் மட்டும் என்ன விதிவிலக்கா..? உப்பு முதல் மென்பொருள் தயாரிப்பு வரை பல துறைகளில் வர்த்தகம் செய்யும் டாடா குழுமம் பிரிட்டன் மண்ணில் சுமார் 19 நிறுவனங்களை வைத்துள்ளது. இதில் சுமார் 60,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். பிரிட்டன் நாட்டில் அதிகளவில் முதலீடும் வர்த்தகம் செய்து வரும் பன்னாட்டு நிறுவனமான டாடா குழுமம் வெள்ளிக்கிழமை 7 மணிநேர பங்குச்சந்தை வர்த்தகத்தில் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பை இழந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகள் 7.99 சதவீதம் வரை சரிந்து இக்குழுமத்தை கதிகலங்க செய்துள்ளது. காரணம் பிரிட்டன் நாட்டின் முன்னணி கார் நிறுவனமான ஜாகுவாரின் தயாரிப்பு மற்றும் விற்பனை பிரிவுகள் டாடா மோட்டார்ஸ் கையில் உள்ளது. ஐரோப்பா மற்றும் பிரிட்டன் பிரிவால் ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனம் மட்டும் அடுத்த 4 வருடத்தில் தனது வருவாயில் 1.47 பில்லியன் டாலர் இழப்பைச் சந்திக்க உள்ளது. காரணம் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்களுக்கான வரி மற்றும் இதர செலவுகள் அதேபோல், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி செலவுகள் தான். டாடா குழுமத்தின் பிற முக்கிய நிறுவனங்களான டாடா ஸ்டீல் 6.37 சதவீத வர்த்தகச் சரிவையும், டிசிஎஸ் 2.78 சதவீத வர்த்தகச் சரிவை சந்தித்தது. டிசிஎஸ் நிறுவனத்தின் 16 சதவீதம் வருமான பிரிட்டன் சந்தையில் இருந்து வருகிறது. அதேபோல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் லாபத்தில் 90 சதவீதம் ஜாகுவார் லேண்டு ரோவர் மூலம் கிடைப்பவை. இப்பிரிவின் மூலம் மிகப்பெரிய வர்த்தகச் சரிவை கண்ட டாடா குழுமம், தனது வர்த்தகத்தையும், லாபத்தையும் நிலைநிறுத்தக்கொள்ளத் தற்போது புதிய செயல் வடிவமைக்கும் பணியில் இறங்கியுள்ளது.டாடா குழுமம்
19 நிறுவனங்கள்
ரூ.30,000 கோடி இழப்பு
சரிவு
பிரிவு..
பிற நிறுவனங்கள்
டாடா குழுமத்தின் வருமானம்
புதிய செயல் வடிவம்